
பெற்றோர்கள் பிரிந்து வாழும் நிலையில், மூன்று சகோதரர்கள் கண்டிப்பான தனது தந்தையுடன் வசிக்கிறார்கள். பணக்கார அப்பாவுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட தோல்வியால், தங்களது சிறுவயது பருவத்தை தொலைத்துவிட்டு, வீட்டு பொறுப்புகளில் மூழ்கும் மூன்று சகோதரர்களும், எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அவற்றை சமாளித்து, பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் எப்படி கற்றுக்கொள்கிறார்கள், சிறுவர்களின் மனநிலையை புரிந்துக் கொண்டு அவர்களது தந்தை மாறினாரா? இல்லையா?, என்பதே நாங்கள்’ படத்தின் கதை.
அப்துல் ரஃபே மூன்று பிள்ளைகளின் தந்தையாகவும், கல்வியாளராகவும் இரண்டு வித பரிணாமங்களில் கண்டிப்பு நிறைந்தவராக காண்பிக்கப்பட்டாலும், அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதை விவரிக்கும் இடத்தில் நடிப்பில் தனித்து நிற்கிறார்
சகோதரர்களாக சிறுவர்கள் மித்துன், ரித்திக் மோகன், நித்தின்.டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.பெற்றோர் பிரிவால் ஏற்படும் பாதிப்புகளை வசனங்கள் இன்றி நடிப்பிலேயே சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.பெரும்பாலும் சோகமாகவே இருக்கும் அவர்கள் சில காட்சிகளில் மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார்கள். அதையும் அளவாகச் செய்திருப்பது நன்று.
ரஃபேவின் மனைவியாகவும் குழந்தைகளின் அம்மாவாகவும் வரும் பிரார்த்தனா, அவர்களது வாழ்க்கையில் போலவே படத்திலும் ஒட்டாமல் போகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் கையாண்டுள்ளார். இசையமைப்பாளர் வேத் சங்கர் சுகவனத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களம் மற்றும் காட்சிகளில் இருக்கும் இருக்கமான சூழ்நிலையை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.
சமூகத்தில் உயரிய பதவியில் இருக்கும் சிங்கிள் பேரண்டாக மகன்களை வளர்க்கும் தந்தையின் பார்வையில் கண்டிப்பும், தண்டிப்பும் மிகையாக இருக்க, அதனால் ஏற்படும் உறவில் சிக்கல்கள், விரிசல்கள், மனஉளைச்சல்களை பிரதிபலிக்கும் பிம்பமாக படத்தை உணர்ச்சிக் குவியலாக குழந்தைகள் நடித்திருக்கும் முக்கிய படமாக இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் அவினாஷ் பிரகாஷ் . ஆனால் உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தாலும், அதை சாமானியர்கள் புரிந்துக் கொள்வது போல் சொல்ல வேண்டும், aங்கே கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார்.









