Reviews

அம்… ஆ ; விமர்சனம்


தனது மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் ஒரு அழகிய மலைகிராமத்தில் வாழ்ந்து வருகிறார் தேவதர்ஷினி. தனக்கு உலகமே தனது மகள் தான் என்று மொத்த பாசத்தையும் கொட்டி வளர்த்து வருகிறார் தேவதர்ஷினி. யாருக்கும் பெரிதாக அறியப்படாமல், ஒரு மறைமுக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் தேவதர்ஷினி.

இந்நிலையில், அக்கிராமத்திற்கு திலீஷ் போத்தன் சாலை அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கான வேலைக்கு வருகிறார். வந்த இரண்டு நாட்களிலேயே டிலேஷ் போத்தன் அதற்காக வரவில்லை, தேவதர்ஷினிக்காகவும் அந்த குழந்தைக்காகவும் தான் வந்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.

அதன் பிறகு தான் இவர் யார் விவரம் தெரிய வருகிறது.. இவர் தேவதர்ஷினியை தேடி வந்ததாகவும் கூறுகிறார்.. அப்படி என்றால் தேவதர்ஷினி யார்? அவருடன் இருக்கும் குழந்தை யார்? இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பதெல்லாம் மீதிக்கதை.

காமெடி வேடங்களில் நடித்து வந்த தேவதர்ஷினி, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். அதிகமாக பேசவில்லை என்றாலும், பயம், குழந்தை மீதான பாசம், பனிவு என்று அனைத்து உணர்வுகளையும் தனது மவுனம் மூலமாக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்..

பொறியாளராக அறிமுகம் ஆகி பின்னர் போலீசாக உருவெடுக்கும் திலீப் போத்தன் தன் வேடத்துக்குப் பெருமளவு நியாயம் செய்திருக்கிறார். பொறியாளர் வேடத்துக்கு பாந்தமான பார்வையும் போலீஸ் வேடத்துக்கு மிடுக்கான பார்வையுமாக அவர் மாற்றி நடித்திருப்பது நுட்பமான உத்தி..

கலகலப்பாய் கலந்து பழகுகிற லோக்கல் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாபர் இடுக்கி அற்புதமாக நடித்திருக்கிறார்.

குழந்தையை வளர்க்கப் போகின்ற தாயாக நடித்திருக்கும் மீரா வாசுதேவன் 14 வருடங்கள் கழித்து தான் தாய்மை அடைந்திருக்கும் அந்த உணர்வை அவர் வெளிப்படுத்துகின்ற விதமும் அந்த சந்தோஷத்தில் அவர் காட்டுகின்ற உணர்வுகளும் அட்டகாசம் என்று சொல்லலாம்

ஒளிப்பதிவாளர் அனிஷ்லால் ஆர்.எஸ் கேரளாவில் உள்ள அனைத்து மலைகள் மற்றும் அருவிகள் காட்சி படுத்திய விதம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
.
இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில், மலை கிராம மக்களின் வாழ்வியலை சொல்லும் பாடலும், பின்னணி இசையும் கதைக்களம் மற்றும் கதை மாந்தர்கள் மீதான கவனத்தை திசை திருப்பாமல் பயணித்திருக்கிறது.

ஒரு குழந்தைக்காக ஏங்கும் தாயின் வலியையும் குழந்தையின் அருமை தெரியாமல் இருக்கும் தாயின் வாழ்க்கையையும் மிகவும் நேர்த்தியாக கையாண்டு திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஒரு அழகிய கிராமத்தை, மனதை வருடும் அழகியலை திரைக்குக் கொண்டு வந்ததற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்..
.
.