சாஹோ – விமர்சனம்


பாகுபலி படத்தின் இரண்டு பாகன்களின் பிரமாண்ட வெற்றிக்குப்பின் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தன சாஹோ.. அதை ஒரு அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார் என்பதுதான் இந்தப்படத்தின் ஆச்சர்யமான அம்சமே.. எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு என்ன கொடுத்திருக்கிறார் பிரபாஸ்.

வாஜி என்கிற நாட்டில் இரு தரப்புகளுக்கிடையே யார் தலைவர் என்கிற உரிமை சண்டை நடக்கிறது. அந்த குழுவில் இருக்கும் ஜாக்கி ஷெராப் தலைமை பொறுப்பை ஏற்று சிறப்பாக வழி நடத்தி வருகிறார். தனக்கு பிறகு தன்னுடைய மகன் தான் தலைமைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் ஜாக்கி ஷெராப், 20 ஆண்டு காலமாக பிரிந்து இருக்கும் தன் மகனை தேடி மும்பைக்கு வருகிறார். அங்கு ஜாக்கி ஷெராப் கொலை செய்யப்படுகிறார்.

அதே சமயம் மும்பையில் நூதனமான முறையில் சில திருட்டுகள் நடக்கின்றன. இந்த திருட்டை கண்டு பிடிக்க சிறப்பு போலீசாக பிரபாஸ் களமிறங்குகிறார். அப்போது, நீல் நிதின் முகேஷ் தான் இந்த திருட்டை செய்தது என்று கண்டுபிடிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அப்படியே உல்டாவாக அந்த திருட்டை செய்தது பிரபாஸ் என்று போலீசுக்கு தெரிய வருகிறது.

இன்னொரு பக்கம் பல லட்சம் கோடி அளவில் உள்ள பணத்தை கைப்பற்ற உதவும் பிளாக் பாக்ஸை கைப்பற்ற முன்னாள் தலைவர் டீனு ஆனந்தின் மகனான சன்கி பாண்டேவும், ஜாக்கி ஷெராப்பின் மகனான அருண் விஜய்யும் முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியில் பிரபாசும் எடுபடு இருப்பது தெரிய வருகிறது.

இறுதியில் அந்த பிளாக் பாக்ஸை யார் கைப்பற்றினார்கள்? உண்மையில் பிரபாஸ் யார்? எதற்காக இந்த திருடன் போலீஸ் விளையாட்டு என்பதெல்லாம் மீதிக்கதை..

பாகுபலியில் பார்த்த அந்த கம்பீரமான பிரபாஸை இப்படத்தில் பார்க்க முடியவில்லை. பெரும்பாலும் பில்டப் கட்சி மற்றும் வசனங்களாலேயே அவரது கதாபத்திரத்தை வலுவிழக்க செய்திருகிறார்கள். இறுதியில் மட்டுமே பிரபாஸின் நடிப்பை பார்க்க முடிகிறது.

பிரபாசுக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் நடிகை ஸ்ரத்தா கபூர். விஜய் டிவி ஜக்குளைனை பார்ப்பது போலவே பல இடங்களில் நமக்கு தோன்றுகிறது. படத்திற்கு பெரிய பலம் அருண் விஜய்யின் நடிப்பு. லுக், பாடி லான்ங்வேஜ் சிறப்பாக அமைந்திருக்கிறது. நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப், லால் ஆகியோர் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

தனிஷ்க் பக்‌ஷி, குரு ரன்துவா, பாட்ஷா, சங்கர் ஏசான் லாய் ஆகியோர் இசையில் அமைந்த பின்னணி இசை சிறப்பு. மதியின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுஜித் ரெட்டி.

ஆனால், ஹாலிவுட், பாலிவுட் படங்களில் மொழி புரியவில்லை என்றாலும் கதை புரியும். இந்த படம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டாலும் குழப்பமான திரைகதையாலும் தேவையற்ற காட்சிகளாலும் சுவாரஸ்யம் குறைந்து விடுவது உண்மை.. திரையில் தோன்றும் பிரம்மாண்டம் பார்ப்பவர்களை கவரவில்லை. கிராபிக்ஸ் காட்சிகளும் பெரியதாக எடுபடவில்லை.