‘அலைகள் ஓய்வதில்லை’ ஜோடியின் வாரிசுகளின் அலை ஓய்ந்து போனதோ..?


சின்னவர் படத்தில் கவுண்டமணி கடலுக்கு மீன்பிடிக்கப்போய் வலையில் செந்தில் மாட்டிக்கொண்டது தெரியாமல் கரைக்கு இழுத்து வருவார்.. ஏதோ பெரிதாக மாட்டிக்கிடுச்சு என பக்கத்தில் இருந்தவர்கள் பலரும், வலைக்குள் இருப்பது ஏதோ அரிய உயிரினம் போலவும், அது கோடி ரூபாய் மதிப்புள்ளது போலவும் அதன் எச்சில் ஏதோ மெடிசன் எனவும் ஆளாளுக்கு அள்ளி விடுவார்கள்.

அப்படித்தான் ஆகிப்போய் விட்டது ‘அலைகள் ஓய்வதில்லை’ ஜோடியின் வாரிசுகள் கதையும். கார்த்திகா, துளாசி என ராதாவின் இரண்டு மகள்களும் நாங்களும் கதாநாயகிகளாக நடித்தோம் என சினிமா கல்வெட்டுகளில் தங்களது பெயரை பதித்து வைத்துவிட்டு வலுக்கட்டாயமாக ரசிகர்களால் வி.ஆர்.எஸ் கொடுக்கப்பட்டு வீட்டில் உட்காரவைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப்பக்கம் கௌதம் கார்த்திக்கோ நடிக்கவந்த இந்த மூன்று வருடங்களில் மூன்றே மூன்று படங்கள் தான் நடித்துள்ளார்.. மூன்றுமே பிளாப்.. இப்போது அவர் இருக்கும் திசைப்பக்கம் எட்டிப்பார்க்க கூட ஆள் இல்லை. ஆனால் இவர்கள் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்திலோ மேலே சொன்னது போல தமிழ் சினிமாவையே புரட்டி போடுவதுபோல பில்டப் கொடுத்தார்கள் பாருங்கள்.. அதுதான் உலக மகா காமெடி.. அந்தவகையில் பார்த்தால் ‘அலைகள் ஓய்வதில்லை’ ஜோடியின் வாரிசுகள் ஓய்ந்துபோய் தான் உட்கார்ந்துள்ளனர்.