பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கிறாரா பாரதிராஜா..?


இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும் இயக்குனர் பாலாவுக்குமான வார்த்தை யுத்தம் கடந்த சில நாட்களாக சூடுகிளப்பி வருகிறது. குற்றப்பரம்பரை’ கதையை தான் படமாக்கவில்லை என்று பாலா ஒருசில நபர்கள் மூலம் சொல்லி அனுப்பியும் அதை காதில் வாங்கிக்கொள்ளாத பாரதிராஜா, ‘பாலா என் எச்சிலை தின்னமாட்டான் என நம்புகிறேன்” என குதர்க்கமாக பேட்டி தந்தார்.

சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த பாலா, இந்த விஷயத்தில் தனது முழு விளக்கத்தையும் அளித்துவிட்டு, இறுதியாக இனி இந்த விவகாரத்தில் தன்னை இழுக்கவேண்டாம்.. இழுத்தால் அவருக்கு நல்லதல்ல என எச்சரித்தார்.

இந்தவிபரமும் பாரதிராஜா காதுக்கு போக, அவரோ இதற்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லை. எனக்கு படம் சம்பந்தமாக நிறைய வேலை இருக்கிறது, அதை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும் என கித்தாப்பாக கூறியுள்ளாராம்..

அதுசரி, பாலா தரப்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் நேரில் போய் உண்மையை விளக்கியும் கூட பாரதிராஜாவின் தாக்குதல் தேவையில்லாமல் தொடர்வது ஏன், என சிலரிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன..

அதாவது இயக்குனர் பாரதிராஜா படம் இயக்கி பல வருடங்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட பீல்டு அவுட் என்றுதான் சொல்லவேண்டும்.. ஆனால் பாலுமகேந்திராவைப்போல தனது கடைசிக்கலத்தில் ஒரு படத்தை இயக்கினோம் என்கிற சாதனையை செய்ய பாரதிராஜா முனைப்புடன் இருக்கிறார். வெறுமனே படத்தை எடுத்தால் போதுமா..? ரசிகர்களிடம் ரீச் ஆகவும், பின்னாளில் பிசினஸ் பேசவும் பப்ளிசிட்டி வேண்டாமா..? அதனால் தான் பாலா மீது வம்படியாக தாக்குதல்களை தொடுக்கிறார் என்று சொல்லப்படுவது உண்மையிலேயே அதிர்ச்சி தரக்கூடியது தான்..