ஞானவேல்ராஜாவை கோபப்படவைத்த ஹீரோ மற்றும் காமெடியன்..!


தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு ஹீரோ மற்றும் ஒரு காமெடி நடிகர் என இருவர் மீது அவர்கள் யாரென்று குறிப்பிடமால் பொது மேடையில் குற்றம்சாட்டியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி நடித்துள்ள அண்ணாதுரை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோதுதான் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞானவேல் ராஜா பேசும்போதுதான் இப்படி கூறியுள்ளார்.

“தயாரிப்பாளர் சங்கத்துல இப்ப புதுசா மூன்று புகார் வந்திருக்கு. எல்லாமே நடிகர்கள் சம்பந்தப்பட்ட புகார். கரெக்டா ஷுட்டிங்குக்கு வரதில்லை. 30 சதவீதம் படம் முடிஞ்சதுமே, இதோ படத்தை ரிலீஸ் பண்ணிக்குங்க, நான் முழுசா படம் முடிச்சிக் கொடுக்க மூணு வருஷம் ஆகும்னு சொல்லி ஒரு படத்தை ரிலீஸ் பண்ண கதை வந்துச்சி. அந்தப் படத்துக்காக 18 கோடி ரூபாய் கடனா கொடுத்திருக்காங்க. அந்த தயாரிப்பாளரோட நிலைமை என்ன மொத்த விஷயத்தையும் கேள்விப்படும் போது அவ்வளவு சங்கடமா இருக்கு

அந்த பஞ்சாயத்துக்காக அந்த ஹீரோவை சந்திக்க போன போது இரவு 11 மணிக்கு போன எங்களை விடியற்காலைல 5.30 மணிக்குதான் வந்து பார்த்தாரு. மொத்தம் 29 நாள்தான் அவர் ஷுட்டிங் வந்திருக்காரு, அப்படியே வந்த நாட்கள்லயும் 4 மணி நேரம் மேல அவர் இருந்ததில்லை. இப்படி பொறுப்பில்லாம வேறு எந்த நடிகரும் இந்தியாவுல இல்லை.

அடுத்தது நாம எல்லாரும் ரசிக்கக்கூடிய ஒரு காமெடியன் இருக்காரு. அவரைப் பார்த்து சிரிக்கவே முடியாத அளவுக்கு ஒரு தயாரிப்பாளரை காயப்படுத்தியிருக்காரு. நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்துலயும் நான் தலையிட மாட்டேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சொல்லிட்டாரு. இப்ப மூணு தயாரிப்பாளர்கள் எங்ககிட்ட வந்திருக்காங்க. கண்டிப்பா அந்த நடிகர்கள் மேல நடவடிக்கை எடுப்போம்,” என பூடகமாக கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.

ஆனால் அந்த ஹீரோ சிம்பு என்றும், நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றும் சொல்லப்படுகிறது. சிம்பு நடுத்தெருவில் நிறுத்தியிருக்கும் தயாரிப்பாளர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், வடிவேலு இம்சை கொடுத்துள்ள தயாரிப்பாளர் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தயாரிப்பாளர், இயக்குனர் ஷங்கர் என்றும் சொல்லப்படுகிறது.