‘கோடைமழை’ பிரியங்காவுக்கு தெரியாமல் அவரை வைத்தே பாடல் காட்சியை படமாக்கிய இயக்குனர்..!


கங்காருவில் பாசமிக்க தங்கச்சி… ‘வந்தா மல’யில் ரகளையான வடசென்னைப் பெண். இப்போது கோடை மழையில் அம்சமான கிராமத்து அழகி… நெல்லைச் சீமையின் மண்வாசனை நாயகியாக அச்சு அசலாகப் பொருந்திவிட்டார் என நடிகை பிரியங்காவுக்கு குவிகின்றன பாராட்டுகள்.

நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தாலும், இன்னும் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்து ப்ரியங்காவுக்கு. அது கோடை மழை படம் மூலம் தணிந்திருக்கிறது. பிரபு தேவாவின் உதவியாளர் கதிரவன் இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ஆரம்பத்தில் படம் குறித்து எந்த பரபரப்பும் இல்லை.

இப்போது மெல்ல மெல்ல படம் குறித்த ‘டாக்’ நல்லவிதமாகப் பரவ, சந்தோஷத்தில் இருக்கிறார் ப்ரியங்கா. அவரிடம் இந்தப்படத்தில் உங்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது என ஏதாவது இருக்கிறதா என்றால் இந்தப்படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்ட வித்தம் மறக்க முடியாதது என்கிறார் பிரியங்கா.

“இந்தப் படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு நான் நடித்தது மறக்க முடியாதது. என் முதல் படம் கங்காருவிலும் அவர்தான் பாடல்கள் எழுதினார். உண்மையைச் சொல்லணும்னா… இந்தப்படத்தில் எனக்கு அவருடைய பாடல் வரிகளைப் போட்டுக்கூடக் காட்டவில்லை. படப்பிடிப்பில், ‘எப்போ சார் சாங் ஷூட் பண்ணுவீங்க’ என்று இயக்குநரை நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். அவரோ, ‘எடுக்கலாம்.. எடுக்கலாம்’ என்று சொல்வார். அவ்வப்போது, என்ன சில பாவங்கள் காட்டி அப்படி நடித்துத் தரக் கேட்பார். ஆனால் ப்ரிவியூ பார்த்த போதுதான், அதெல்லாம் பாடல் காட்சிகளுக்காக எடுக்கப்பட்டவை என்பதே எனக்குத் தெரிய வந்தது,” என்கிறார் பிரியங்கா.. கதனாயகிகே தெரியாமல் பாடல் காட்சியை எடுத்த இயக்குனர் பலே ஆள் தான்.