ஒரேநாளில் விழா ; திட்டமிட்ட விஷால்..! திடுக்கிட்ட விஜய்..!

கடந்த சில மாதங்களாகவே நடிகர் சங்கத்தில் தலைமை பொறுப்புக்கு எப்படியும் வந்துவிட வேண்டும் என்கிற நோக்கில் தான் விஷாலின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. நாடக நடிகர்களை தொடர்ச்சியாக சந்தித்து அவர்களின் ஆதரவை கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விஷால்.

கடந்த சில தினங்களுக்கு முன், மதுரையில் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பரவை முனியம்மாவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கியதோடு, இனி மாதந்தோறும் அவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்வதாக வாக்கு கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் ரசிகர் மன்றம் மூலம் மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தங்கள் வழங்குவது, ஏழைகளுக்கு தையல் மிஷின் வழங்குவது என இறங்கி அடிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது அவர் நடிகர் மன்ற தலைமையை மட்டுமல்ல, அதை தொடர்ந்து அரசியலில் இறங்குவதற்கான அச்சாரமும் போட்டு வருகிறார் என பலரும் பேசினார்கள்.

குறிப்பாக தற்போது அரசியல் கனவில் இருந்தாலும் கூட, அதில் தீவிரமாக இறங்க தயக்கம் காட்டிக்கொண்டிருக்கும் விஜய்க்கு போட்டியாக விஷாலின் செயல்பாடுகள் இருப்பதாக பலரும் பேச ஆரம்பித்தார்கள்.. விஜய்யின் காதுக்கும் இந்த தகவல் போனது. ஆனால் விஜய் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் விஜய் தனது படத்திற்கு புலி என டைட்டில் வைக்க, விஷாலோ தன் படத்திற்கு ‘பாயும் புலி’ என டைட்டில் வைத்து காம்பெடிஷன் காட்டிய கதையையும் விஜய்க்கு எடுத்து சொல்லியிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இப்போது ஒருபடி மேலேபோய் விஜய்யின் ‘புலி’ பட இசைவெளியீட்டு விழா நடைபெற இருக்கும் அதே நாளில் (02-08-15), விஷால் தனது ‘பாயும் புலி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்துவதாக அழைப்பிதழ் கொடுப்பதாக தெரிய வந்ததும் தான் விஜய் கொஞ்சம் ஜெர்க் ஆனார்..

இந்தவிதமாக மாஸ் காண்பிக்க முயலும் விஷாலின் திட்டம் விஜய்க்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. ஒருநாள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ விஷால் தனது பட இசை வெளியீட்டு விழாவை நடத்த வாய்ப்பிருந்தும், ஒரே நாளை தேர்ந்தெடுத்து இருப்பது ‘புலி’ படத்தின் பப்ளிசிட்டி வேகத்தை குறைப்பதற்காகத்தான் என்பதாக நினைக்கும் விஜய் விஷாலின் தொடர் நடவடிக்கைகளால் திடுக்கிட்டுள்ளார் என்றே பேசிக்கொள்கிறார்கள்.