யுவன்சங்கர் ராஜா புண்ணியத்தால் புறம்போக்குக்கு கிடைக்கப்போகும் தனி பட்டா..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, நடித்து வரும் ‘மாஸ் படத்துக்கு, வழக்கம்போல அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் தான் இசையமைத்து வருகிறார். படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதால் முதலில் மே-1ஆம் தேதி ‘மாஸ்’ வெளியாகும் என தகவல் வெளியானது. அதன்பின் மே-15ல் ரிலீஸ் உறுதி என்றார்கள்.. ஆனால், படத்தில் யுவன்சங்கர் ராஜாவின் பணிகள் இன்னும் முடிவடையாததால் மீண்டும் படம் ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ தள்ளிப்போகும் என தெரிகிறது.

யுவனின் பணிகள் தள்ளிப்போனதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தமன் பணியாற்றி இருக்கிறார். யுவனுக்கு தெரியாமலே தமனை வைத்து ஒரு பாடலை பதிவு செய்து படப்பிடிப்பும் நடத்தியதாகவும் அதனால் யுவன் டென்சன் ஆனதாகவும் ஏற்கனவே சொல்லப்பட்டது.

அதன் எதிரொலியாகத்தான் பாடலின் ஃபைனல் அவுட்புட்டான ‘டாட்’டைக் கொடுக்காமல் இன்னும் இழுத்தடிக்கிறாராம் யுவன். இப்போது கொடுத்தால் கூட ஆடியோ சிடி தயாராக ஒரு மாதம் ஆகிவிடும் என்பதால் படம் எதிர்பார்த்தபடி மே-15ல் வெளியாக வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறதாம்.

சரி இதனால் புறம்போக்கு படத்திற்கு என்ன லாபம்.. மே-15 அன்று மாஸ் மற்றும் புறம்போக்கு படங்கள் இரண்டும் ஒன்றாக ரிலீஸ் ஆகவிருந்தன. மாஸ் இப்போது தள்ளிப்போகும் சூழலில் இருப்பதால், புறம்போக்கிற்கு ஈசியாக தனி பட்டா வாங்கிவிடுவார்கள் தானே..?