அங்காடி நடிகையிடம் புலம்பிய களவாணி நடிகர்..!

அங்காடி நடிகையுடன் தற்போது மூன்றாவது முறையாக ஜோடிசேர்ந்து மணமகன் + காட்டுராஜா பெயர் கொண்ட படத்தில் நடித்து வருகிறார் களவாணி நடிகர். ஷூடிங்ஸ்பாட்டில் கிடைக்கின்ற இடைவெளியில் அங்காடி நடிகையிடம் பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்வாராம் களவாணி. அப்போது தன்னை அறிமுகப்படுத்திய கடற்கரை இயக்குனர் பற்றிய ஒரு கசப்பான சம்பவத்தையும் அதனால் தனக்கு உண்டான வைராக்கியத்தையும் நடிகையிடம் பகிர்ந்துகொண்டாராம்

கடற்கரை இயக்குனர்தான் களவாணியை அறிமுகப்படுத்தியவர் என்பதால் எப்போதும் இயக்குனர் கூப்பிட்டால் உடனே ஆஜாராகி விடுவார் களவாணி.. வளர்ந்து வந்த சமயம் அல்லவா..? வாரிசு நடிகரை வைத்து பரம்பரை படத்தை இயக்கி முடித்துவிட்டு அடுத்து கடற்கரை படத்தில் சின்னத்திரை மிமிக்ரி நாயகனை கதாநாயகனாக்கி அழகு பார்த்த கதையெல்லாம் இங்கே சொல்ல தேவையில்லை.

அதன்பின்னர் தனது சிஷ்யப்பிள்ளைகள் இருவரையும் வைத்து இரண்டு ரஜினி பட டைட்டில்களை ஒன்றாக்கி ஒரு படத்தை எடுத்தார் அல்லவா..? அந்தப்படத்தில் நடிக்கும்போது என்ன காரணமோ தெரியவில்லை.. ஒரு காட்சியில் களவாணி பலமுறை டேக் வாங்கினாராம்.. கொஞ்சநேரம் அமைதியாக இருந்த கடற்கரை இயக்குனர், தொடர்ந்து பல டேக்குகள் போகவே டென்சனாகி உன்னைய நடிக்க வச்சதுக்கு பதிலா ஒரு எருமை மாட்ட நடிக்க வச்சிருக்கலாம். சொன்னபடி ஒழுங்கா பண்ணிட்டு போகும் என அனைவர் முன்னாடியும் அசிங்கமாக திட்டிவிட்டாராம்.

என்னதான் தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் என்றாலும், எதற்கும் ஒரு லிமிட் இருக்கிறதே.. அதை அந்த சமயத்தில் மனதிற்குள் பூட்டிவைத்த களவாணி அப்போதே முடிவு செய்தாராம் இனி எக்காரணத்தை கொண்டும் கடற்கரை இயக்குனர் அழைத்தால் அவரது படத்தில் நடிக்க கூடாது என்று.

அதன்பின் களவாணியை அழைக்கும் வாய்ப்பு இயக்குனருக்கு நீண்ட நாட்கள் ஏற்படவில்லை. ஆனால் மன்மதனை வைத்து எடுத்த படம் அம்போ என பாதியில் நிற்பதால் கிடைத்த கேப்பில் களவாணியை வைத்து ஒரு படம் இயக்கிவிடலாம் என நினைத்து அவருக்கு செய்தி சொல்லி அனுப்பியிருக்கிறார்.

உடனே பவ்யமாக அவரை தேடிவந்த களவாணி, அண்ணே இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கால்ஷீட் டைரி புல்லா இருக்குண்ணே.. நீங்க கூப்பிட்டும் உங்களுக்கு தேதி கொடுக்க முடியலையேன்னு நினைக்கிறப்ப ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே என்று நைச்சியமாக பேசி எஸ்கேப் ஆகி வந்துவிட்டாராம்.

இந்த வைராக்கிய கதையையும் தான் வாகை சூடிய கதையையும் தான் கலகலப்பாக அங்காடியிடம் சொல்லிக்கொண்டிருந்தாரம் நம்ம களவாணி நடிகர். அதற்கப்புறம் கடற்கரை இயக்குனர் ஒளி நடிகர் தயாரிக்கும் கவிதை படத்தை இயக்கப்போய்விட்டார். களவாணியே இப்படி டீல் பண்ணினார் என்றால் இவர் வருத்தப்படாத வாலிபனிடம் போய் நின்றால் அவர் எப்படி டீல் பண்ணியிருப்பார்..? நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்..!