ஜோதிகா சமந்தா வழியில் சாயிஷா

நட்சத்திர தம்பதிகள் வரிசையில் சமீபத்தில் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் திருமண வாழ்வில் இணைந்துள்ளனர். கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட காதல், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்துள்ளது. பொதுவாக திருமணத்திற்குப் பின் நடிகைகள் வீட்டோடு முடங்கி விடுவது தான் வழக்கம்.

ஒரு சிலர் மட்டும் விதிவிலக்கு. அதே போன்ற ஒரு விதிவிலக்காக தானும் இருக்கப்போவதாக நடிகை சாயிஷா கூறியுள்ளார். இதில் திருமணத்திற்குப் பின்னும் நடித்து வரும் ஜோதிகா, சமந்தா ஆகியோரை தனது முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் சாயிஷா.

மேலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதற்கு தனது கணவர் ஆர்யா மிகவும் ஊக்கம் கொடுத்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது காப்பான் படத்தில் ஆர்யா சாயிஷா இருவருமே நடித்துள்ளனர். இதையடுத்து டெடி என்கிற படத்திலும் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து நடித்து வருகின்றனர்.