குறும்படங்களுக்கு விருது வழங்கும் நடிகர் கோபிகாந்தி!

கல்வியால் வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் ஒரு ஏழை மாணவனின் போராட்டத்தை சொன்ன முதல்மாணவன் திரைப்படம் வாயிலாக திரைத்துறைக்கு நாயகனாக அறிமுகம் ஆனவர் கோபிகாந்தி. நாமக்கல்லை தாய் மண்ணாக கொண்ட இவர், சாதாரண சாக்கு தைக்கும் தொழிலாளியாக இருந்து, உழைப்பால் உயர்ந்து, பின்னர் திரைத்துறைக்கு வந்தவர். எந்த பின்புலமும் இல்லாமல் சுயம்புவாக முதல்மாணவன் திரைப்படத்தை தயாரித்து, அதில் நாயகனாகவும் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால் அதிரடியாக வைரமகன் மற்றும் வீரக்கலை ஆகிய படங்களை தொடங்கி, பரபரப்பாக படப்பிடிப்பையும் முடித்துள்ளார். இதில் வைரமகன் படம் தாய்-மகன் நடுவே உள்ள பாசப்போராட்டத்தையும், வீரக்கலை படம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும் சொல்கிறது. விரைவில் இப்படங்களின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. வீரக்கலை படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையும் கோபி காந்தியின் R.S.G.PICTURES நிறுவனத்திடமிருந்து பீனிக்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையே புதிய திறமைசாலிகளை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் தனது தயாரிப்பில் நாடக கலைஞர்கள், திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க கோபி காந்தி முடிவு செய்துள்ளார். அத்துடன் சிறந்த குறும் படங்களுக்கு விருதுகள் வழங்கவும் தீர்மானித்துள்ளார். எனவே குறும்பட படைப்பாளிகள் 163A, R.P.புதூர் மெயின் ரோடு, நாமக்கல் – 1 என்ற முகவரிக்கு தங்களது குறும்படங்களை அனுப்பி வைக்கலாம் எதிர்காலத்தில் நாமக்கல்லில் ஒரு திரைப்பட ஸ்டுடியோவை நிறுவும் திட்டமும் கோபிகாந்திக்கு இருக்கிறது.

திரைப்பட தயாரிப்பாளர் – நடிகராக பிரபலமாகி உள்ள கோபிகாந்தி நாமக்கல் வட்டாரத்தில் ஒரு சமூக சேவகராகவும் அறியப்பட்டுள்ளார். உலக சமூக சேவை மையம் என்ற தன்னார்வ அமைப்பை நிறுவி ஏழை எளியவருக்கு உதவும் நல்ல மனதை பாராட்டி சென்னை கலை மன்றம் கோபிகாந்திக்கு கோல்டு ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்துள்ளது. கோல்டு ஸ்டார் கோபிகாந்திக்கு இப்போது ரசிகர் மன்றமும் உருவாகியுள்ளது. மற்றவர்களை போல் வழக்கமான எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் பொதுமக்களுக்கு நற்பணி மட்டுமே செய்ய வேண்டும் என தனது ரசிகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார் கோபிகாந்தி.