நயன்தாராவால் விஜய்சேதுபதிக்கு அடித்த லக்..!

தயாரிப்பாளராக தனுஷ், ஜோடிப்புறாக்களாக விஜய்சேதுபதி, நயன்தாரா என வித்தியாசமான கூட்டணியை ஒன்றிணைத்து ‘நானும் ரௌடி தான்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.. இவர்தான் சிம்பு நடித்த ‘போடா போடி’யை இயக்கியவர். அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இது படத்தை பற்றிய டீடெய்ல்.. இதுவரை உங்களுக்கு தெரிந்திருக்கும் தான். ஆனால் இந்தப்படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு நயன்தரா ஆஜராகவில்லை என்று தெரிகிறது… என்ன காரணம் சொல்லி சமாளித்தாரோ தெரியவில்லை இன்னும் கொஞ்ச நாளைக்கு ஷூட்டிங்க வரமுடியாது என்று சொல்லிவிட்டதாக தகவல்.

நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளுக்காக சில நாட்கள் விஜய்சேதுபதியும் கால்ஷீட்டை ஒதுக்கியிருந்தாராம். இனி விஜய்சேதுபதியின் வேறொரு படத்தின் ஷூட்டிங் தொடங்கும் வரை அந்த நாட்கள் வேஸ்டாக போகும் தானே.. உடனே ‘சூதுகவ்வும்’ இயக்குனர் நலன் குமாரசாமியை அழைத்து விஷயத்தை சொன்னார்.. ஏற்கனவே நலன், விஜய்சேதுபதியிடம் ஒரு கதையை சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்தார்.

அந்தக்கதை தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கும் தெரியும்.. தங்கள் இருவரையும் வளர்த்துவிட்ட அவருக்கு, இருவரும் நன்றிக்கடனாக ஒரு படம் பண்ணித்தருவதாக ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். இப்போது விஷயம் இப்படி சாதகமாக அமைய, இதை உடனே சி.வி.குமாரிடம் சொல்லியிருக்கிறார்கள். மறுநாளே அவசர அவசரமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து, புதிய படத்திற்கு பூஜை போட்ட கையோடு, படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார்கள்.

சில படங்கள் முன்கூட்டியே பூஜை போடப்பட்டு லேட்டாக ரிலீஸ் ஆவதும், சில படங்கள் லேட்டாக பூஜை போடப்பட்டாலும் முந்திக்கொண்டு தியேட்டருக்கு வருவதிலும் பின்னணியில் இதுபோன்ற ஏதோ சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.