’12-12-1950′ படத்தில் ‘பரோல்’தான் மையக் கருத்து..!


ஜெயில் துறையில் எப்போதும் புழக்கத்தில் இருக்கும் ‘பரோல்’ என்கிற வார்த்தை இப்போதுதான் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் சசிகலா உறுப்பு மாற்று ஆபரேஷன் செய்து மருத்துவமனையில் இருக்கும் தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக பெங்களூர் ஜெயிலிலிருந்து கடும் முயற்சிகளுக்கு பிறகு ‘பரோலில்’ வந்து சென்றது தமிழ்நாட்டு மக்களிடையே பரபரப்பான செய்தியாக இருந்து வருகிறது.

இந்த ‘பரோல்’ என்கிற ‘தற்காலிக விடுதலை’ என்னும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ’12-12-1950′.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியுள்ளவர் ‘கபாலி’ செல்வா. இவர் கதைப்படி சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர். தற்போது ஒரு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனை கைதியாக சிறையில் இருக்கிறார்.

ரஜினியின் ஒரு படத்தின் முதல் நாள், முதல் காட்சியை காண ஆசைப்பட்டு இதற்காகவே பரோலில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வர விரும்புகிறார். இது நடந்ததா.. இல்லையா என்பதுதான் இந்த காமெடி கலந்த ஜனரஞ்சகமான படத்தின் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் வாரங்களில் ரிலீசாக தயாராகவுள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து கபாலி செல்வா பேசுகையில், ”ஒரு வருடத்திற்கு முன்பு செய்தித்தாள் ஒன்றில் பரோலில் வந்த ஒரு சிறை கைதி பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தியை படித்தேன். அதுதான் ’12-12-1950′ படத்தின் கதை உருவாக காரணமாக இருந்தது.

ரஜினி சாரின் மிக பெரிய ரசிகனான எனக்கு அவரது பிறந்த நாளான இந்த தலைப்பைவிட சிறப்பான தலைப்பு இருக்காது என தோன்றியது. இப்படத்தில் காமெடி, எமோஷன்ஸ் மற்றும் கலகலப்பு சரியான கலவையில் தரப்பட்டுள்ளது. ரஜினி சார் ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். ’12-12-1950′ திரைப்படம் வெகு விரைவில் ரிலீஸாகவுள்ளது…” என்றார்.