ஜடா – விமர்சனம்


நாயகன் கதிர் ஒரு கால்பந்தாட்ட வீரர். கதிரின் பயிற்சியாளர் கதிரை தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற செய்ய முயற்சி செய்கிறார்.

இந்நிலையில் விதிகளே இல்லாமல் விளையாடும் செவன்ஸ் என்னும் கால்பந்தாட்டம் சென்னையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க உள்ளதை அறிந்து அதில் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கதிர்.

விதிகளே இல்லாததால் அந்த செவன்ஸ் கால்பந்தாட்டத்தில் ஆபத்து அதிகம் என்றும், கை, கால்களை கூட இழக்க நேரிடும் என்றும் பயிற்சியாளர் கூறியும் அதில் விளையாட வேண்டும் என்று அதீத முனைப்போடு இருக்கிறார் நாயகன் கதிர்.

ஒரு கட்டத்தில் செவன்ஸ் போட்டியில் கதிர் விளையாடி வரும் நிலையில், ஒரு பிரச்சினை ஏற்பட காவல்துறையினர் சென்னையில் போட்டியை நடத்த அனுமதி மறுக்கின்றனர்.

அதனால் எஞ்சியுள்ள அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளை சாத்தான்குளத்தில் நடத்த முடிவு செய்கின்றனர். ஆகவே போட்டியில பங்கேற்க கதிர் மற்றும் அவருடைய நண்பர்கள் குழு சாத்தான்குளம் செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு மர்மமான சம்பவங்கள் நடக்கிறது.

அவர்களுக்கு ஏற்பட்ட மர்மமான சம்பவங்கள் என்ன? கால்பந்தாட்ட போட்டியில் கதிர் அணியினர் வெற்றி பெற்றனரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கதிர், கால்பந்து மைதானத்தில் விளையாடும் போதும், காதல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகி ரோஷினி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
காமெடியில் கலக்கி இருக்கிறார் யோகி பாபு. ஒரே கிக்கில் அனைவருடைய கவனத்தையும் தன் வசமாக்கி இருக்கிறார்
ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் தன்னுடைய பார்வையாலேயே வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் அறிமுக காட்சியிலும், மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

கால்பந்தாட்டத்தில் செவன்ஸ் என்னும் விளையாட்டை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ள இயக்குனர் குமரன் விளையாட்டை விட்டு விலகாத வகையில் திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணியில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

படத்தின் பிற்பாதியில் இவருடைய இசையும் சூர்யாவின் ஒளிப்பதிவும் சேர்ந்து ரசிகர்களை பயமுறுத்துகிறது.
மொத்தத்தில் ‘ஜடா’ ரசிக்கலாம்.