கோ-2 விமர்சனம்

கோ 2 என்றால் கோ வை விடச் சிறப்பாக இருக்கவேண்டுமே! பாபி சிம்ஹா – நிக்கி கல்ராணி நடித்த இந்தப் படத்திகென்று சில தனித்துவம் இருக்கிறது, அதனடிப்படையில் பெயர் வைத்திருக்கலாம். பத்திரிக்கையாளர் Vs முதலமைச்சர் சார்ந்த படங்களுக்கு கோ என்று பெயர் வைக்கவேண்டும் என்பதற்காக வைத்தார்களோ என்னமோ!

அசப்புல ஓபிஎஸ் மாதிரியே வருகிறார் உள்துறை அமைச்சராக வரும் இளவரசு. முதலமைச்சரக் கடத்திட்டாங்கன்னு தெரிஞ்சும் மனிதர் ரொம்பவே கூலா இருக்கார். அண்ணேன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று இருக்கிற மாதிரியும் இல்ல… இருக்காத மாதிரியும் இல்ல…

உள்துறையும் , தலைமைச்செயலாளரும் , டிஜிபியும் வீடியோ கான்பரன்சில் கொஞ்சம் கூட பரபரப்பு இல்லாமல் “உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்”

ஜான் விஜய் கெத்தக் காட்ட, என் எஸ் ஜி வெத்துங்கிற லெவலுக்கு காட்சி வைச்சுருக்கீங்களேப்பா!

உள்துறை அமைச்சர பழிவாங்க மொதலமைச்சர கடத்துறதே ஒரு அபத்தமாப் பட்டாலும், மொத நாள் காலைல ஏழு மணிக்கு கடத்தப்படும் முதலமைச்சர மறு நாள் காலைல வரைக்கும் வைச்சிருந்து அனுப்புறதுக்குப் பதிலா, ஒரு மூணுமணி நேர ஆபரேஷனா கதையைச் சொல்லு முடிச்சுருக்கலாம்.

கவுன்சிலர கடத்துனா சின்னபடமும் இல்ல, மொதலமைச்சரக் கடத்துனா பெரிய படமும் இல்ல…

கதையும் கதாபாத்திரங்களும் வலுவாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் அப்பதான் அது நல்ல படம்.

ஜிகிர்தண்டாவில் நல்லா நடிச்ச பாபி சிம்ஹா, இதுல வெறும் வசனங்களைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்… கருணாகரன், அப்பா வந்துடுவாருன்னு காத்திருக்கிற வெகுளியா நல்லா பண்ணியிருக்கார்.

அறிமுக இயக்குநர் சரத்தின் சமூக நோக்கு போற்றத்தக்கதே! பொருட்களுக்கு விலை நிர்ண்யம் செய்யும் போது அது ஒண்ணு நுகர்வோருக்குச் சாதகமா இருக்கனும் அல்லது அரசாங்கத்துக்குச் சாதகமா இருக்கனும் , அத விட்டுட்டு இடைத்தரகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் சாதகமா இருக்கு, அதனால ஒவ்வொரு நாளும் எத்தனாயிரம் கோடி ரூபாய் யார் யாருக்குலாமோ போய்ச்சேருது… இது போன்ற விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவையே என்றாலும், மொத்ததில் கோ 2 இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டிய படம்.