அஜித்துக்காக தனது சொந்தப்படத்தை தள்ளிவைத்த விக்ரம்பிரபு..!


அறிமுகமான சில வருடங்கள் மட்டும் ஒரு நேரத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டுத்தான் இன்னொரு படத்தில் நடித்துவந்தார் விக்ரம் பிரபு.. ஓரளவு ஸ்டெடியானபின் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.. பின்னே காற்றுள்ள நேரத்தில் தானே தூற்றிக்கொள்ள முடியும்… அந்தவகையில் தற்போது வாகா, வீரசிவாஜி, முடிசூடா மன்னன், நெருப்புடா என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்..

இதில் வாகாவும் வீரசிவாஜியும் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘முடிசூடா மன்னன்’ படப்பிடிப்பு முடிய இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கிறதாம். இந்த நிலையில், தானே சொந்தமாக கம்பெனி ஆரம்பித்து அதன்மூலம் ‘நெருப்புடா’ என்கிற படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடித்து வருகிறார் விக்ரம்பிரபு.

இதில் ‘முடிசூடா மன்னன்’ படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தான், அடுத்ததாக சிவா டைரக்சனில் அஜித் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது. இன்னும்சில நாட்களில் அஜித் படத்தை ஆரம்பிக்க இருப்பதால், அதற்குள் ‘முடிசூடா மன்னன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டால் புதிய படத்தில் கவனம் செலுத்த வசதியாக இருக்கும் என விக்ரம் பிரபுவிடம் கோரிக்கை வைத்தது..

தன்னால் அஜித் படத்துக்கு சிக்கல் வந்துவிட கூடாது என நினைத்த விக்ரம் பிரபு, தனது சொந்தப்பட வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு, இப்போது முடிசூடா மன்னன் படத்தில் நடித்து வருகிறாராம்.. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என தெரிகிறது..

அப்படி முடிந்துவிட்டால் மூன்று படங்கள் ரிலீசுக்காக அவரது கைகளில் சேர்ந்து விடும்.. ஆனால் படங்கள் தேங்காமல் சேரான இடைவெளியில் ரிலீஸ் பண்ணிவிடுவதுதான் விக்ரம் பிரபுவின் எதிர்காலத்திற்கு நல்லது.