“அதையே ஏன்யா கேட்குறீங்க” ; டி.ராஜேந்தர் டென்ஷன்..!


டி.ராஜேந்தர் எரிச்சல் படும் அளவுக்கு யார் என்ன கேட்டிருப்பார்கள்… ஒருவேளை அவரது மகன் பாடிய பீப் சாங்கை பற்றி கேட்டிருப்பார்களோ..? இல்லை, எந்த ஒரு படத்தையும் முழுதாக முடிக்க ஷூட்டிங் ஸ்பாட் வந்து ஒத்துழைப்பு தரமாட்டேன் என்கிறாரே சிம்பு.. நீங்களாவது சொல்லக்கூடாதா என கேட்டிருப்பார்களோ..?

அப்படியெல்லாம் எதுவும் டி.ஆரிடம் கேட்கப்படவில்லை.. அவரை தர்மசங்கடப்படுத்தவுமில்லை. திருச்சிக்கு சமீபத்தில் வந்த அவரிடம் உங்கள் மகனுக்கு எப்போது திருமணம் என்றுதான் பத்திரிகையாளர்கள் கேட்டனர்.. அவ்வளவுதான் பொங்கிவிட்டார் பொங்கி.. “அதயே ஏன் கேட்குறீங்க.. ‘இது நம்ம ஆளு’ படம் 50 நாள் ஓடுச்சே அதுபத்தி எல்லாம் கேட்கமாட்டீங்களே” என்று விறைப்பு கட்டினார்.

பின் கொஞ்சம் கூலானாவர், “சிம்புவை திருமணம் செய்து கொள்ள ஏராளமான பெண்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். மனப் பொருத்தம், ஜாதகப் பொருத்தத்துடன் கூடிய பெண்ணைத் தேடிவருகிறோம். சிம்புவின் திருமணம் காதல் திருமணமாகக்கூட இருக்கலாம்” என்று பதிலளித்தார்.. ஆமா காதல் திருமணமாக இருக்கலாம் என்பவர் எதற்காக பெண் தேடிக்கொண்டு இருக்கிறார் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.. எப்படியோ பிரசாந்த் கதை போல ஆகாமல் இருந்தால் சரி தான்.