‘காற்றின் மொழி’ படத்தில் புதிய ஜோதிகா..!


ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ வரும் நவ-16ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தநிலையில் ஜோதிகா உட்பட படக்குழுவினர் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து இதில் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கதையின் நாயகி ஜோதிகா பேசும்போது, “ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது.

‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.

இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த படத்தில் நடித்தது போலவே தெரியவில்லை. என் மகனாக நடித்த தேஜஸ் உடனான காட்சிகளில் மிகவும் ரசித்து நடித்தேன். குழந்தைகள் என்றாலே மொபைல் போனில் விளையாடுவார்கள். ஆனால் தேஜஸ் ஒருமுறை கூட விளையாடி நான் பார்த்ததே இல்லை. எல்லோருடனும் பேசிக் கொண்டிருப்பான். பிறந்த நாள் என்றாலே எஸ்.எம்.எஸ் மூலம் வாழ்த்து தெரிவிக்கும் இந்த காலத்தில், எல்லோருடனும் இணைந்து பேசுவான். இவனைப் பார்த்த பிறகு என் பிள்ளைகளுக்கும் இவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது” என கூறியுள்ளார் ஜோதிகா.