முரண்டு பிடிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்

இந்த கொரோனா தாக்கம் வந்தாலும் வந்தது. திரைப்படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் ஹீரோக்களிடம் இருவிதமான கருத்துகள் ஏற்பட்டுள்ளன. ஹீரோக்கள், தனகளது படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யவேண்டும் என்கின்றனர்.. ஆனால் இந்த சமயத்தில் தியேட்டர்களில் வெளியிட்டால், கூடம் வராது, ஒருவேளை படம் நன்றாக இல்லை என ரிசல்ட் வந்தால் மொத்த பணமும் அவுட்டாகி விடுமே என பயப்படுகின்றனர். அதனால் அமேசன் போன்ற ஒடிடி தளங்களில் படத்தை வெளியிட்டால் அசலுடன் கொஞ்சம் லாபமும் கிடைக்கும் என விரும்புகின்றனர்.

அந்தவகையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தை இயக்குனர், நாயகன் ஆகியோரது எதிர்ப்புகளையும் மீறி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார் அதன் தயாரிப்பாளர் சசிகாந்த்.

அதேசமயம் தனுஷ் நடித்துள்ள மற்றொரு படமான ‘கர்ணன்’ படம் ஏப்ரல் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே தனுஷின் அசுரன் படத்தை வெளியிட்டு அசுர லாபம் பார்த்தவர்.. அதனால் த்யேட்டரில் தான் கர்ணன் படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறார்.

ஆனால் ஜகமே தந்திரம்’ படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதை வெளியிட உள்ள ஓடிடி நிறுவனம் அறிவிக்கவில்லை. இருந்தாலும் ‘கர்ணன்’ படத்துடன் போட்டியாக வெளியிடவும் வாய்ப்புள்ளது. இல்லையென்றால் இரண்டு படங்களும் அடுத்தடுத்தும் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வருகிறது. அன்றைய தினம் சில முன்னணி ஓடிடி தளங்கள் புதிய படங்களை நேரடியாக அவர்களது ஓடிடி தளங்களில் வெளியிட உள்ளார்கள். அதனால் ‘ஜகமே தந்திரம்’ படத்தையும் அன்றைய தினத்தில் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இப்படி புதிய படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளங்களில் வெளியானால் மக்கள் தியேட்டர்களுக்கு வருவது மேலும் குறையும் என தியேட்டர்காரர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.