மன்சூர் அலிகான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா..? போலீஸாரிடம் சிம்பு கேள்வி


பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கடந்த 12ம் தேதி, கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியபோது பலரும் கைது செய்யப்பட்டனர். அப்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கைது செய்யப்பட்டு பல்லாவரத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டார். மாலை வெகுநேரமாகியும் சீமான் விடுதலை செய்யப்படாததை கண்டித்து, மண்டபம் எதிரே நடிகர் மன்சூர் அலிகான் தர்ணா நடத்தினார்.

அப்போது மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை மன்சூர் அலிகான் விடுதலை செய்யப்படவில்லை. மன்சூர் அலிகான் கைது பற்றி விவரம் கேட்க நடிகர் சிலம்பரசன் இன்று கமிஷனர் அலுவலகம் வந்தார். மன்சூர்அலிகான் எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீசாரை சந்தித்து சிலம்பரசன் விளக்கம் கேட்டார்.

மேலும் சிலம்பரசன் போலீசாரிடம் பேசியபோது, மன்சூர் அலிகான் நல்ல எண்ணத்திற்காக போராட வந்தார், தமிழன் என்ற உணர்வோடு போராடினார். யார் செய்தது சரி யார் செய்தது தவறு என்று கேட்பதற்காக இங்கு வரவில்லை. ஒரு உணர்வுடன் நமக்காக என்னையும் கைது செய்யுங்கள் என்று முன் வந்தவர் மன்சூர் அலிகான். அதே சமயம் கிட்னி பிரச்சனையால் அறுவை சிகிச்சை செய்த நிலையிலும் அவர் சிறையில் இருக்கிறார்.

என்னை சந்தித்த அவருடைய மகன் அண்ணா, அவர் சிறையில் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என என்னிடம் கதறியதால் மன்சூர் அலிகானின் நிலை என்ன ஆனது என்றும் எதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் தான் இங்கே வந்தேன். மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.. ஒருவேளை மன்சூர் அலிகான் தவறாக பேசி இருந்தால் அவருக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் சிலம்பரசன் கேட்டுக்கொண்டார்.