“தம்பி நீ யாருன்னு எனக்கு தெரியும்” – சின்ன சிம்புவை கலாய்த்த பாண்டிராஜ்..!

அனேகமாக இன்னும் சில தினங்களில் ‘இது நம்ம ஆளு’ படம் தொடர்பாக பரபரப்பான விவகாரங்கள் வெடிக்க தொடங்கும் என்றே தெரிகிறது. அதற்கான ஆரம்பம் சில நாட்களுக்கு முன்னதாக, நயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ஆர் புகார் கொடுத்ததாக சொன்னபோதே தெரிந்துவிட்டது.

இப்போது அடுத்த விவகாரத்திற்கு திரி கிள்ளியிருக்கிறார் சிம்புவின் தம்பியும் இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இசையமைப்பாளருமான குறளரசன். பெரியவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என இவர் பேசாமல் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம்..

ஆனால் தனது ட்விட்டர் பக்கத்தில் “’இது நம்ம ஆளு’ இயக்குனர் பாடல்களையெல்லாம் ‘வேஸ்ட்’ என்றும் இதை யாரும் கேட்க மாட்டார்கள் என்றும் சொன்னார். ரசிகர்கள் பாடல்களைக் கேட்டு முடிவெடுக்கட்டும்” என்றும் தனது அண்ணன் சிம்பு பற்றி உருக்கமாகவும் மிகப்பெரிய ட்வீட் ஒன்றை உருக்கத்துடன் பதிவிட்டிருந்தார்..

உடனே அதற்கு பதிலடி தரும் விதமாக இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “தம்பி நீ யாருன்னு எனக்குத் தெரியும். நான் யாருன்னு உனக்குத் தெரியும். நாம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும். தூக்கம் வந்தால் போயி தூங்கு போ” என காட்டமாக கலாய்த்து பதில் போட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, “ஒரு நல்ல முதலாளிக்கு அழகு, உழைத்தவனின் வியர்வை காய்வதற்குள் ஊதியம் கொடுப்பது.. ஒரு வருடம் சென்றாவது கொடுக்கலாமே. சீக்கிரமே மொத்த குழுவினருடன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன். கடந்த இரண்டரை வருடங்களாக என்ன நடந்தது, என்னென்ன சிரமங்களை சந்தித்தேன் என சொல்லப்போகிறேன்” என்றும் கூட பதிவிட்டுள்ளார்..

சிம்புவின் பிரச்சனை மட்டும் ‘வாலு’ போல நீண்டுகொண்டே போகிறதே.. ஷ்ஷ்ஷ்…அப்பா…