விழா மேடைகளில் அளந்து பேசலாமே பார்த்திபன்…?


இவரைப்போல சிறந்த மனிதரை நான் பார்த்ததே இல்லை..

இவரைப்போன்ற நண்பர் எனக்கு வேறு யாரும் இல்லை…

நான் பார்த்த நடிகர்களிலேயே இவரது நடிப்புதான் பெஸ்ட்..

இப்படி பல திரைப்பட விழாக்களில் சம்பந்தப்பட்ட யாரோ ஒரு பிரபலத்தை இன்னொருவர் புகழ்ந்து பேசுவதை பார்த்திருக்கலாம். அவரை புகழவேண்டும் பெருமைப்படுத்தவேண்டும் என்பதற்காக ஒரு சிலர் கூறும் அலங்கார வார்த்தைகள் தான் இவை..

ஆனால் இவை அவர் சார்ந்த மற்றும் சாராத பலரையும் காயப்படுத்தி விடும் என்பதை அறியாத அறிவிலிகளாகத்தான் இருக்கிறார்கள்.. இதில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். முக்கியமான இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள் என்றால் இரண்டு போரையும் தேவைக்கேற்ற நேரத்தில் தூக்கி வைத்து புகழ்வார்கள்.. அதனாலேயே சிக்கலுக்கும் ஆளாவார்கள்.

அப்படித்தான், சமீபத்தில் நடைபெற்ற ‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் பேசிய பேச்சுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது என்றாலும் தேவையில்லாத சிக்கலை இழுத்தும் விட்டுள்ளது.. அந்த விழாவில் விஜய்யை மிகவும் புகழ்ந்து பேசி அஜித் ரசிகர்கள் கோபத்திற்கு ஆளானார் பார்த்திபன்..

இந்த விழாவில் பேசிய பார்த்திபன் “விஜய்யும், விஜய் ரசிகர்கள் மட்டும் சேர்ந்தாலே அந்த படம் அட்லீஸ்ட் ரூ. 100 கோடி வசூலிக்கும். விஜய்யும், ஆஸ்கர் நாயகன் ரஹ்மானும் இணைந்தால் அந்த படம் ரூ. 200 கோடி வசூலிக்கும். விஜய், ஏ.ஆர். ரஹ்மான் சேர்ந்தால் அந்த படத்தை தேனாண்டாள் தயாரித்தால் அந்த படம் அட்லீஸ்ட் ரூ. 300 கோடி வசூலிக்கும் என்றார். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.. அவரது ரசிகர்கள் ஒன்று சேர்ந்தால் விஜய் தான் இனி சி.எம்’ என கூவ ஆரம்பித்துவிட்டார்..

விடுவார்களா அஜித் ரசிகர்கள்.. சோஷியல் மீடியாவில் ‘உனக்கு எதுக்கு இந்த சோம்பு தூக்குற வேலை’ என போட்டு தாளிக்க ஆரம்பித்துவிட்டனர்.. நிலைமை சீரியசாவதை உணர்ந்த பார்த்திபன், உடனே அஜித் ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக “காசுக்கு மாரடிக்காத Mass-ஆன பேச்சுக்கு மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது இதுவே முதன்முறை.. வாயார/மனதார வாழ்த்துவது என் மேடை நாகரிகம். அவர் அழைத்தாலும் தலை நிமிர இப்படி சொல்வேன். “வேகத்தை விட ‘விவேகம்’ பெருசு- ஆனால் விவேகத்தை விட அஜீத்தே பெருசு!.. நான் கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால் சினிமாவுக்கு மட்டுமே ரசிகன். ‘ஆளப்போறான்(?)சிறந்த(?)மனிதன்(?) வாழப்போறான் விவசாயி’-அதுவே நம்பிக்கை நிறைந்த என் பேச்சின் மெரஸலான மெசேஜ்” என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்..

பார்த்திபன் போன்றவர்கள் கவிதையாக பேசினாலே கைதட்டல் கிடைக்கும்போது விஜய்யை சி.எம் ரேஞ்சுக்கு தூக்கிவைத்து புகழ்ந்து பேசவேண்டிய தேவை என்ன.. பார்த்திபன் போன்றோருக்கு இது அழகல்ல என சோஷியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.