உணர்வுகளின் உன்னதம் பேசும் படம்

ஹரி இயக்கிய ‘சேவல்’ வெற்றிப் படத்தை தயாரித்த ஜே ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் ‘ரீங்காரம்’

படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி, பாலசந்தர்,மூர்த்தி , ‘அரசு’சுரேஷ், எசி.ஜே.பாஸ்கர் என பல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த பரந்துபட்ட அனுபவம் பெற்றவர். பொருட் செலவு, பிரமாண்டங்கள் மத்தியில் மனதைத் தொடும் கதைகளும் காட்சிகளுமே வெற்றி பெறும்; பேசப்படும் .அந்த வகையில் உணர்வுகளின் உன்னதம் பேசும் படம்தான் ‘ரீங்காரம்’

இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம். அதைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக் களமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது.படத்தின் கதையை விட அதன் திரைக்கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டே படம் தயாரிக்க முன்வந்ததாகக் கூறுகிறார் தயாரிப்பாளர் ஜின்னா.விடுகதையைப்போல இதன் திரைக்கதையை உணர்ந்ததாகவும் விடைஅறியும் ஆர்வத்தை சுவாரஸ்யமான காட்சிகள் ஏற்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.

இது ‘ஒரு நாளில்’ நடக்கும் கதை. கதையின் விறு விறுப்புக்கும் வேகத்துக்கும் வேகத்தடை வேண்டாம் என்று படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள்தான் . அதில் ஒன்றை ‘குட்டிப்புலி’ ‘அருவா மீச’ புகழ் பத்மலதா பாடியுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் கூறும் போது
“மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை. இந்த இரண்டு விதமான உணர்வுகளையும் சரிவர பயணம் செய்து பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன். இதை ஓர் அனுபவமாக உணர வைத்திருக்கிறேன். ஆனாலும் இதை புதுசு என்று சொல்லமாட்டேன்.” என்கிறார்.

இதுவரை 25 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார்கள்.
*தமிழ் ரசிகர்கள் என்றும் புதுமையை ரசிப்பவர்கள். புதிய கதை சொல்லிகளை ஆராதிப்பவர்கள் ரீங்காரத்தையும் வரவேற்பார்கள்.