வடிவேலுவுக்கு மீண்டும் வாழ்வளிக்க முன்வந்த ஷங்கர்..!


என்றைக்கு கேப்டன் விஜயகாந்தை இகழ்ந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேச ஆராம்பித்தாரோ, அப்போதே வடிவேலுவின் சினிமா வாழ்க்கை ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அதன்பின் பல வருடங்கள் வனவாசம் இருந்த வடிவேலு, ஹீரோவாகவும் ஒன்றிரண்டு படங்களில் நடித்தார்… ஒன்றும் போணியாகவில்லை.

அதை தொடர்ந்து முக்கிய நடிகர்களுடன் ஒன்றிரண்டு படங்களில் காமெடியனாக நடித்தார்.. அதிலும் பருப்பு வேகவில்லை.. அடுத்தததாக விஜய்யுடன் இணைந்து ‘மெர்சல்’ படஹ்தில் நடித்துள்ளார் வடிவேலு.. அது வடிவேலுவிற்கு பிளஸ் ஆக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் வடிவேலுவை ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தில் கதாநாயகனாக்கி படம் தயாரித்த இயக்குனர் ஷங்கர், இப்போது மீண்டும் வடிவேலுவுக்கு கைகொடுத்து கரையேற்றும் விதமாக ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார்.. ஷங்கரின் ‘எஸ்’ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் லைக்கா நிறுவனமும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது.

வடிவேலுக்கு மட்டுமல்ல, தான் இயக்குனராக அறிமுகப்படுத்தி வாழ்க்கை கொடுத்த இயக்குனர் சிம்புதேவனும், தற்போது தொடர் தோல்விகளால் துவண்டுகிடக்கிறார் அல்லவா..? அவருக்கும் இந்தப்படத்தின் மூலம் மறுவாழ்வு தருகிறார் ஷங்கர்..