பெரிய நடிகர்களை மறைமுகமாக குத்திக்காட்டும் சிம்பு..!


சமீபகாலமாக, தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வரும் போது எவ்வளவு பெரிய கட்-அவுட் வைப்பது என்ற போட்டி நிலவும். அந்தக் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது, மாலைகள் அணிவிப்பது என பெரும் பணத்தை ரசிகர்கள் செலவழிப்பார்கள்.

தற்போது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்கு கட்-அவுட் எல்லாம் வைக்க வேண்டாம் என்று சிம்பு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று (ஜனவரி 15) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி, இயக்குநர் சுந்தர்.சி சாருக்கு பெரிய நன்றி. எப்போதுமே ஸ்டார் படங்கள் திரைக்கு வரும்பொழுது அதிகமாக காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. திரையரங்கில் கவுண்டரில் என்ன விலை டிக்கெட் விற்கிறார்களோ, அந்த விலைக்கு வாங்கிப் பாருங்கள்.

படத்துக்கு ப்ளக்ஸ் வைப்பதோ, அந்த ப்ளக்ஸுக்கு பால் அபிஷேகம் பண்ணுவதோ வேண்டாம். அதற்கு பதிலாக அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை மற்றும் தம்பி தங்கைக்கு இனிப்புகள் என உங்களால் முடிந்ததை வாங்கிக் கொடுங்கள். அவர்களுக்கு கொடுப்பதை படங்களாகவோ இல்லையென்றால் வீடியோவாகவோ வலைதளங்களில் போட்டால் அதை விட எனக்கு வேறு சந்தோஷம் இல்லை

பேனர் கட்-அவுட் வைத்து மாஸ் கெத்து காண்பிப்பது முக்கியமில்லை. நான் படத்தில் நன்றாக நடித்து, ரசிகர்கள் ஆகிய உங்கள் பெயரை காப்பாத்தணும். எனக்காக நீங்கள் இதையெல்லாம் செய்யுங்கள். இது என்னுடைய வேண்டுகோள்” என சிம்பு தன் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

இது ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் இவ்வாறு சொலவில்லை பார்த்தீர்களா என்பதை குத்திக்காட்டுவது போல அமைந்துள்ளது என்றே பலரும் சொல்கிறார்கள்.