மக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிராக போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பத்து பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில் நடிகர் சூர்யா வேதனையுடன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது ;

“தூத்துகுடியில் நடந்த மக்கள் போராட்டம் கொடூரமான உயிர் பலிகளைச் சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டுவருகிற இழப்புகளும் தொடர்ந்து ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம், போராடுவதே வன்முறை ஆகிவிடாது. பாதிப்புகள் அதிகரிக்கும்போது போராடுவது ஒன்றுதான் மக்களுக்கு முன்னிறுக்கும் ஒரே வழி. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்களே மக்களுடைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும்.

தூத்துக்குடியில் நடந்திருப்பது ஏதோ சாதிக் கலவரமோ, மதக்கலவரமோ அல்ல. வாழ்வாதாரத்திற்கான நீண்ட காலப் போராட்டம். மக்கள் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிராக திடீரென்று ஒரு நாளில் வீதிக்கு வந்து போராடிவிடவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள். “ஆபத்து நிறைந்த இந்தத் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம்” என்று மகாராஷ்டிர மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்ட ஆலை இது.

மக்கள் எதிர்ப்பு, அறிஞர்கள் எதிர்ப்பு, சட்டப் போராட்டம் கடந்து, ஆபத்து விளைவிக்கிற ஒரு ஆலை இயங்குவது நியாயப்படுத்தவே முடியாதது. பல்வேறு அத்துமீறல்களை செய்து, மக்களின் உயிருக்கும், தூத்துக்குடி பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலையை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி என்ன காரணத்துக்காகச் செயல்பட அனுமதிக்கிறார்கள்?

நான் படப்பிடிப்பிற்குப் பல முறை தூத்துக்குடி சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களிடம் பேசியிருக்கிறேன். சாதரண மக்களிடம் பேசும்போதுகூட, ‘ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்று சொல்வார்கள். காரணங்கள் இல்லாமல் இல்லை. பாதிப்புகள் அப்படி!

ஆபத்துமிக்க திட்டங்கள் அனைத்தையும் ஒரு குப்பைக்கூடைக்குள் தூக்கி எறிவதைப்போல, தமிழகத்தில் செயல்படுத்துகிறார்கள்’என்கிற குற்றச்சாட்டை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். உயிரும் ஆரோக்கியமான வாழ்க்கையும்தான் முக்கியம்” என்று மக்கள் சொல்லும்போது, “உங்கள் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்” என்ற அரசின் பதில் உள்நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது.

அப்படியென்றால், யாருடைய வாழ்வாதாரத்தை அடகு வைத்து, யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்? ஒரு பிரச்னையை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது, மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தின் துணைகொண்டும், அதிகாரத்தின் வாள் கொண்டும் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது.

வயல்களை அழித்து, மலைகளை உடைத்து, வனத்தை நாசப்படுத்தி, ஆறுகளைச் சூறையாடி கொண்டுவரப்படும் எந்தப் பொருளாதார லாபமும் நிச்சயம் மக்களுக்கானவை அல்ல. அது வேறு யாருக்கானதோ என்பது நிதர்சனம். ‘இதை மக்களின் நலனுக்காகச் செய்கிறோம்’ என்பது சாத்தான் ஓதும் வேதம். இனி இழப்புகள் மக்களுக்கானதாக இருக்கக் கூடாது. இனியும் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது” என வேதனையும் கோபமுமாக கூறியுள்ளார்