அறிமுக நாயகன் ஆதிக்பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’!

யுவிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் அமராவதி பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சுகந்தி ஆறுமுகம் தயாரிக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்’.

இப்படத்தில் ஹீரோவாக ஆதிக்பாபு அறிமுகமாகிறார். ஹீரோயினாக அர்ச்சனா அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘நாடோடிகள்’ அபினயா, எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், நிஷாந்த், அருள் டி.சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கே.எஸ்.மனோஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, கபிலன், கார்த்திக் நேத்தா ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். எஸ்.பி.அஹமது படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டிஸ்னி இயக்குகிறார்.

படம் குறித்து இயக்குநர் டிஸ்னி கூறுகையில், “யாரென்றே தெரியாத நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சளால் விரக்தியடைந்த ஒருவர் தன் கைகளில் நீதியை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரில் படமாக்கப்பட்டிருக்கிறது. முழு படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.