உதவி இயக்குனர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் புகார்..!

புதிதாக வாய்ப்பு கேட்கப்போகும் இடத்தில் ஏ.ஆர்.முருகதாஸின் அசிஸ்டன்ட்டுகள் என்றாலே ராஜமரியாதை தான். அதற்கேற்ற மாதிரி இயக்குனராக மாறும் அவரது சிஷ்யர்களும் ஓரளவுக்கு அவரது பெயரை காப்பற்றும் விதமாக படங்களை எடுத்து, அவருக்கு நல்லபெயர் வாங்கி தருகிறார்களோ இல்லையோ, அவர் பெயரை கெடுக்காத அளவுக்கு நடந்துகொள்கிறார்கள்.

எல்லாமே சரியாக போய்க்கொண்டிருந்தால் எப்படி..? இப்போது ஏ.ஆர்.முருகதாஸுக்கு தலைவலி கொடுக்கும் காரியத்தில் அவரது சீடர் ஒருவர் இறங்கியுள்ளார் என்றால் நம்பமுடிகிறதா..? குருவையே எதிர்க்கும் சிஷ்யரா..? அப்படி என்னதான் பஞ்சாயத்து இருவருக்கும் இடையில்..? கேள்வி எழத்தானே செய்யும்…

தீனா படத்தை இயக்கிய காலத்திலிருந்தே சம்பத்குமார் என்பவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்தார். அப்படியானால் எத்தனை வருடங்கள் என பார்த்துக்கொள்ளுங்கள்.. எந்நேரமும் முருதாஸின் நிழல்போலவே இருந்த சம்பத்குமாருக்கும் முருகதாஸுக்கும் ஒரு கட்டத்தில் மனக்கசப்பு ஏற்பட்டது.

அப்போதே முருகதாஸிடம் டாட்டா பைபை சொல்லிவிட்டு வெளியேறிய அவர், பல வருட முயற்சிக்குப் பிறகு தானே சொந்தமாக ‘இருவர் ஒன்றானால்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். ஆனால் நேற்று வெளியான இந்தப் படத்தின் விளம்பரம் தான் தற்போது முருகதாஸை டென்சனாக்கியுள்ள்ளது.

கோபம் கொள்ளும்படி அப்படி என்ன செய்தார் சம்பத்குமார்..? இருவர் ஒன்றானால் படத்தின் விளம்பரத்தில், ப்ரம் அஸோஸியேட் ஆப் ஏ.ஆர்.முருகதாஸ் என்கிற டேக் லைனை போட்டுள்ளார். இதுதான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை டென்ஷனாக்கிவிட்டது.

அவரிடம் வேலைபார்த்துவிட்டு அவரது ஆசியுடன் சென்றிருந்தால் அப்படி போட்டுக்கொள்வதில் நியாயம் இருக்கிறது. சொல்லப்போனால் அப்படி சுமூகமாக சென்றவர்கள் கூட இதுபோல முருகதாஸின் அசிஸ்டன்ட் என தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. ஆனால் இந்த சம்பத்குமார் மட்டும் முருகதாஸிடம் சண்டைப்போட்டுக்கொண்டு தான் அவரைவிட்டு விலகினாராம்.

அவர் எப்படி என் பெயரை பயன்படுத்தலாம் என்பதுதான் முருகதாஸின் கோபம்.. படத்தின் விளம்பரங்களில் இருந்து அந்த வாசகத்தை நீக்கும்படி முருகதாஸ் சார்பாக சிலர் சம்பத்குமாரிடம் பேசியபோது அதெல்லாம் முடியாது என மறுத்துவிட்டாராம். இதனால் மேலும் கோபமான முருகதாஸ் இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம்.