அழியாத கோலங்கள் 2 – விமர்சனம்


பிரபல எழுத்தாளராக இருக்கும் பிரகாஷ்ராஜ்க்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது. விருது வாங்கிய உடனே பிரகாஷ்ராஜ் தன்னுடைய முன்னாள் காதலி அர்ச்சனாவை சந்திக்க செல்கிறார். 25 ஆண்டுகள் கழித்து இருவரும் சந்திக்கின்றனர். பல்வேறு விசயங்கள் குறித்து இருவரும் இரவு முழுவதும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு பிரகாஷ்ராஜ் இறந்து போகிறார்.

உடனே அர்ச்சனாவில் குடும்பத்தினர் முதற்கொண்டு அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். சட்டமும் அவரை சீண்டுகிறது. இந்த இக்கட்டான நிலையில் அவரை சந்திக்க பிரகாஷ்ராஜின் மனைவியான ரேவதி வருகிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

குறைந்த பட்ஜெட்டில் அழகாக படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் எம்.ஆர்.பாரதி.

பிரகாஷ்ராஜ் நாளுக்கு நாள் தன்னுடைய நடிப்பில் ரசிகர்களை அசர வைக்கிறார். அர்ச்சனா, ரேவதி போட்டி போட்டு நடித்துள்ளனர். ஒவ்வொரு அசைவிலும் அவர்களது அனுபவமும் பக்குவமும் தெரிகிறது.

காவல்துறை அதிகாரியான நாசர் ரசிகர்கள் அவரை வெறுக்கும் அளவிற்கு காதாபாத்திரத்தோடு ஒன்றி மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது அரவிந்த் சித்தார்த்தின் இசை. அவருடைய இசை ரசிகர்களை கதையுடன் ஒன்ற வைக்கிறது.

படத்தை சுவாரசியம் குறையாமல் கொண்டு செல்கிறது காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு. ராஜேஷ் நாயரின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்துள்ளது.

எளிமையான கதையை அழகாக சொல்லியுள்ளார் இயக்குநர் எம்.ஆர்.பாரதி.

மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம் ‘அழியாத கோலங்கள் 2’