
முதன்முறையாக விஷால் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான ‘மகுடம்’ திரைப்படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.:
ஒரு நடுத்தர வர்க்க மெடிக்கல் ரெப்பான கிருபாகரன் (விஷால்), தன் மனைவி ஜமுனாவுடன் (துஷாரா விஜயன்) எளிய வாழ்க்கை வாழ்ந்து ஒரு கார் வாங்குவதைக் கனவாகக் கொண்டுள்ளார். அவரது அமைதியான வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத தனிப்பட்ட துயரம் நிகழும்போது, அவனது வாழ்க்கை முற்றிலுமாக திசை மாறுகிறது.
இதனைத் தொடர்ந்து வெளிப்படும் பிளாஷ்பேக்கில், கிருபாகரனின் (விஷால்) தந்தை லிங்கா (அவரும் விஷால் தான்) விசாககபட்டினம் துறைமுகத்தில் கொடிகட்டிப் பறந்த ஒரு கொடூரமான தாதா என்பதும், அவரது மனைவி அன்னபூரணி (அஞ்சலி) இந்தத் தொடர்ச்சியான வன்முறைகளின் பின்னணியில் என்ன ஆனார் என்பதும் தெரியவருகிறது.
அதன்பிறகு கடந்த காலச் சூழல் காரணமாகத் தந்தை விட்டுச் சென்ற ஆபத்தான உலகத்திற்குள் விஷால் தள்ளப்படுகிறார். இறுதியில், தன் குடும்பத்தின் துயரத்திற்குப் பழிவாங்கும் வேலையில் இறங்குகிறார். அதன் விளைவுகள் என்ன அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது மீதிக்கதை..
தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களிலும், மூன்று வித்தியாசமான தோற்றங்களிலும் நடித்துள்ளார். மெடிக்கல் ரெப்பாக எளிய மற்றும் கியூட்டான நடிப்பையும், தாதாவாக முரட்டுத்தனமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். எனினும், இயக்குநராகவும் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் நடிப்பில் சில இடங்களில் கவனம் சிதறியுள்ளது.
நாயகி ஜமுனாவாக வந்துள்ள துஷாரா, தனது பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளார். ஆனால் வெறும் நகைச்சுவைக்கான ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் சாப்பிடும் காட்சிகளை வைத்து எடுக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகள், பல இடங்களில் சலிப்பைத் தருகின்றன.
அன்னபூரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியுள்ளார். அப்பா விஷாலின் மனைவியாகவும், காதலியாகவும் வருவதுடன், ஆக்ஷன் காட்சிகளிலும் குத்துப்பாடலிலும் கலக்கியுள்ளார்
தம்பி ராமையா மாமனாராக நடித்துள்ளார், ஆனால் அவரது அதிகப்படியான நடிப்பு மற்றும் சத்தமான குரல் சில இடங்களில் காது வலியை ஏற்படுத்துகிறது. ஜெயபிரகாஷ் மற்றும் வில்லனாக வரும் பதம் குமார் ஆகியோர் தங்களின் கதாபாத்திரங்களை அமைதியாகச் செய்து கவனம் ஈர்க்கிறார்கள்.
ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபி நந்தன் ஆகியோரின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் பரபரப்பாகவும், ராவாகவும் அமைந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் அஞ்சலி ஆடும் குத்துப்பாடல் மற்றும் பின்னணி இசை ஓரளவுக்குக் கைகொடுத்தாலும், மற்ற இடங்களில் இசை பெரிதாக ஈர்க்கவில்லை.
படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடுவது மிகப்பெரிய பலவீனம். முதல் பாதி விறுவிறுப்பு இல்லாமல் மெதுவாகச் செல்வது பார்வையாளர்களைச் சோர்வடையச் செய்கிறது. கார் வாங்கும் ஆசை, நடுத்தர குடும்பத்தின் கஷ்டங்கள் மற்றும் போலி வாகன உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு கருத்து ஆகியவற்றை மையமாகக் கொண்டது பாராட்டுக்குரியது. ஆக்ஷன் காட்சிகளில் விறுவிறுப்பு உள்ளது.
இரண்டாம் பாதியில் அதிகப்படியான வன்முறையும், தர்க்கமற்ற காட்சிகளும் அமைந்துள்ளன. விஷால் இயக்குநராக அறிமுகமாகி இருந்தாலும், திரைக்கதையைச் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வதில் தடுமாறியுள்ளார். நடிப்பதில் பாஸ் மார்க் வாங்கும் விஷால், இயக்குநராக மாறுவதற்கு இன்னும் பல பயிற்சிகள் தேவை என்பதை உணர்த்தியுள்ளார்.









