Reviews

பாரிஸ் கஃபே ; விமர்சனம்


அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக் கலைஞரும் சமூக ஆர்வலருமான அனுமோலும் காதலும் அன்யோன்யமும் நிறைந்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு மருத்துவ மாநாட்டிற்காகக் குரு பாரிஸ் நகரத்திற்குப் பயணம் செய்யும்போது, அங்குள்ள ஒரு கஃபேவில் ஒரு இளம் ஜோடியின் புகைப்படத்தைப் பார்க்க நேரிடுகிறது; தொடர்ந்து அவர்களின் சோகமான மரணப் பின்னணியைப் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மையையும் அறிகிறார்.

சென்னை திரும்பிய அவர் இந்தத் தகவலைத் தன் மனைவியிடம் பகிர்ந்து கொள்ள, அந்த மரணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகிப் பொதுவெளியில் பெரும் விவாதமாக மாறுகின்றன. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அனுமோல் தன் கணவரை விட்டுப் பிரிந்து செல்ல, இவர்களின் மகள் அர்ச்சனாவும் அவரது காதலர் விஜய் விஷ்வாவும் இணைந்து பெற்றோரை ஒன்று சேர்க்க முயல்வதும், அந்த இளம் ஜோடியின் மரணத்திற்கும் குருவிற்கும் உள்ள மர்மமான முடிச்சுகளை அவிழ்ப்பதுமே இப்படத்தின் கதை.

நடிகர் குரு சோமசுந்தரம் அளவான நகைச்சுவை, எதார்த்தமான எமோஷனல் வெளிப்பாடுகள் எனத் தனது முதிர்ச்சியான நடிப்பால் வழக்கம்போல முத்திரை பதித்திருக்கிறார்.

அநீதியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுமோல், தனது அழுத்தமான மற்றும் எதார்த்தமான நடிப்பால் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளார்.

இவர்களுடன் வரும் இளம் ஜோடிகளான விஜய் விஷ்வா, அர்ச்சனா, சாய் விக்கி மற்றும் நயனா சாய் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காதல் மற்றும் எமோஷனல் காட்சிகளில் புதுமையான மற்றும் கலகலப்பான பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியுள்ளனர்.

படத்தின் ஒட்டுமொத்தப் ஓட்டத்தையும் காட்சிகளையும் தங்களது உழைப்பால் செழுமைப்படுத்தியுள்ளனர். ஒளிப்பதிவாளர் சதீஷ் சென்னையின் பரபரப்பான பகுதிகளையும், பாரிஸ் நகரத்தின் அழகையும், அதன் கஃபே சூழலையும் தனது கேமரா கோணங்கள் மூலம் மிக நேர்த்தியாகவும் சர்வதேசத் தரத்திலும் படம்பிடித்துள்ளார். காட்சிகளுக்குத் தகுந்த விஎஃப்எக்ஸ் (VFX) வேலைப்பாடுகளும் கச்சிதமாக அமைந்துள்ளன. இசையமைப்பாளர் கே பல்வேறு இசை வடிவங்களில் பாடல்களைத் தந்ததுடன், உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்குப் பின்னணி இசை மூலம் கூடுதல் எமோஷனைச் சேர்த்துள்ளார்.

இயக்குனர் சூரஜ் சீலன், ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதை எங்கும் ஒரு பிரச்சார நெடியடிக்காதபடி, குடும்ப உறவுகள் மற்றும் தியாகங்களுக்குள் இயல்பாகப் பிணைத்துக் கொண்டு சென்றதில் தனது அசாத்திய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கதையை நகர்த்தும் விதத்திலும், கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்திலும் இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

வெறும் வணிகரீதியான காதல் படமாக இல்லாமல், சமூகம் சார்ந்த ஒரு முக்கியக் கருப்பொருளைத் தேர்ந்தெடுத்ததே ஆகும். பாரிஸ் மற்றும் சென்னை என இரு வேறு பின்னணிகளில் நடக்கும் மர்மங்களை அடுத்தடுத்து அவிழ்க்கும் விறுவிறுப்பான திரைக்கதையும், குடும்ப எமோஷன்களும் பார்வையாளர்களைப் படத்தோடு எளிதாகக் கட்டிப்போடுகின்றன.

இருப்பினும், இரண்டாம் பாதியில் வரும் சில திருப்பங்கள் மற்றும் மர்மங்களை அவிழ்க்கும் காட்சிகள் சற்றே யூகிக்கும் படியாக அமைந்திருப்பது படத்தின் சுவாரசியத்தைக் குறைக்கிறது. இருந்தபோதிலும், ஒரு அழுத்தமான மெசேஜை எமோஷனலாகச் சொன்னதில் ‘பாரிஸ் கஃபே’ நிச்சயம் ஒரு நல்ல சினிமா அனுபவத்தைத் தருகிறது.