
2000த்திற்கு முன்னர் நடக்கும் கதை. தமிழக ஆந்திர எல்லையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐயாக வேலை பார்ப்பவர் சமுத்திரக்கனி. அப்போது இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் ஷிவதா. அந்த பகுதியில் அடுத்தடுத்து கணவன் மனைவி இருவரும் ஜோடியாக கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. ஆரம்பத்தில் சமுத்திரக்கனியை சாதாரண நபராக நினைக்கும் ஷிவதா அவருக்குள் இருக்கும் திறமையை கண்டறிந்து அவரையும் இந்த கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் குழுவில் சேர்த்துக் கொள்கிறார்.
எதிர்பாராத விதமாக கிடைக்கும் தடயங்களை வைத்து கொலையாளியை நோக்கி முன்னேறுகிறார்கள். ஆனால் கொலையாளி அவர்கள் பின்னாலே தான் இருக்கிறார்கள். அவர்களால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடிந்ததா ? தண்டனை வாங்கி கொடுக்க முடிந்ததா என்பது மீதி கதை.
கதையின் நாயகனாக சமுத்திரக்கனி. தனது திறமை அங்கீகரிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவது கண்டு ஒரு கட்டத்தில் வெதும்பும் போதும் பிறகு போங்கடா போங்க போலீஸ் வேலையே வேணாம் என வி ஆர் எஸ் எழுதிக் கொடுத்துவிட்டு அலட்டிக் கொள்ளாமல் டீக்கடையே கதி என இருப்பதும் என ஒரு புது விதமான கதாபாத்திரத்தில் தன்னை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதே சமயம் கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக அவர் களத்தில் இறங்கியதுமே ஷெர்லக் ஹோம்ஸ் போல மாறி விடுவது படத்தின் பரபரப்புக்கு சுவை கூட்டுகிறது.
அவருக்கு ஜாடிக்கேத்த மூடியாக இன்ஸ்பெக்டர் ஷிவதாவும் தன் பங்கிற்கு துடிப்பும் மிடுக்குமாக நடித்துள்ளார் குறிப்பாக விரைவில் திருமணம் ஆக போகும் மணப்பெண்ணாகவும் அதேசமயம் நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிய வேண்டிய போலீஸ் அதிகாரியாகவும் ஒரு காவல்துறையில் பணிபுரியும் இளம் பெண்ணுக்குரிய சங்கடங்களை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
கொலையாளிகளாக வரும் இருவரும் பார்ப்பதற்கே குலை நடுங்க வைக்கிறார்கள். அவர்களுக்கும் பின்னணியில் ஒரு நியாயமான கதை இருந்தாலும் கூட தேவைக்கு அதிகமாக பண்ணும் கொலைகளுக்கான லாஜிக் இல்லாததால் அவர்கள் மேல் பரிதாபத்திற்கு பதிலாக கோபமே வருகிறது.
தனது ஒளிப்பதிவின் மூலம் இன்னும் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கேகே. அதேபோல விபின் பாஸ்கரன் இசையும் கதை நகர்வதற்கு பக்க பலமாக இருந்திருக்கிறது. இயக்குனர் நவீன்குமார் பழனிவேல் உண்மை சம்பவங்களின் பின்னணியில் இந்த கதையை நகர்த்தி இருந்தாலும் பெரும்பாலும் சஸ்பென்ஸ் உடனேயே நகர்த்துகிறார்.
அதே சமயம் ஆரம்பத்திலேயே குற்றவாளிகள் இவர்கள்தான் என்று காட்டிவிட்டாலும் கூட அவர்களை எப்படி பிடிக்க போகிறார்கள் என்பதில் தான் திரைக்கதையில் சுவாரசியும் கூட்டி இருக்கிறார். நல்ல ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வெப் சீரிஸ் பார்க்க வேண்டும் என்கிற ரசிகர்களுக்கு இந்த தடையும் நல்ல தீனி தான்.









