Reviews

ஏஸ் ; விமர்சனம்


சிறையில் இருந்து விடுதலையாகும் விஜய் சேதுபதி, புதிய வாழ்க்கை வாழ்வதற்காக மலேசியா செல்கிறார். தனது நண்பரின் சிபாரிசு என்பதால் அவரை வரவேற்று தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறார் காகிதம் சேகரிக்கும் பணியாளரான யோகிபாபு.. தங்கும் இடத்தில் எதிர் வீட்டில் உள்ள காவல்துறை அதிகாரி பப்லுவின் வளர்ப்பு மகளான ருக்மிணி மீது ருக்மிணி வசந்த் மீது விஜய் சேதுபதிக்கு காதல் மலர்கிறது.

காதலியின் பிரச்சனைக்காக பணம் திரட்டப் போய், சீட்டாட்ட பிரச்சனையில் சிக்கி மாபெரும் கடனாளியாகி அந்தக் கடனை அடைக்க வங்கிப் பணத்தைக் கொள்ளை அடித்து… போலீஸ் ஒருபுறமும் ரவுடிகள் ஒரு புறமும் துரத்த, என்ன ஆகிறார் விஜய் சேதுபதி… அவர் காதல் என்ன ஆனது என்பதுதான் கதை.

விஜய் சேதுபதிக்காகவே எழுதப்பட்ட கதை போல படம் முழுக்க விஜய் சேதுபதியின் ஆதிக்கம்தான். கூடுதலாக இளமையாகவும், ஸ்டைலிஷாகவும் வலம் வருபவர், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.

ஆரம்ப காட்சி முதல் க்ளைமேக்ஸ் காட்சி வரை விஜய் சேதுபதியுடன் பயணிக்கும் அறிவுக்கரசன் யோகி பாபு தன்னுடைய ஸ்டைலில் காமெடி பன்ச் வசனத்துடன் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் கொடுத்து படத்தின் பல காட்சிகளுக்கு இருவரும் சேர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.

தமிழில், கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் ருக்மிணி வசந்த். பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணை போல், ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய அழகு நாயகி ருக்மணி வசந்த்திற்கு..படத்தின் முதற்பாதியை அழகாக்குவது அவர் ஏற்றிருக்கும் ருக்கு பாத்திரம்தான்.

வில்லனாக மிரட்டல் நடிப்பு கொடுத்துள்ளார் அவினாஷ். பப்லு பிரிதிவிராஜ் கேரக்டரை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். இரண்டாவது ஹீரோயினாக கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் நாயகி திவ்யா பிள்ளை.

ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத், இதுவரை திரைப்படங்களில் காட்டப்படாத மலேசியா லொக்கேஷன்களை தேடிப்பிடித்து காட்சிப்படுத்தியிருக்கிறார். காட்சிகளை கலர்புல்லாகவும், கமர்ஷியலாகவும் படமாக்கியிருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். எடுத்துக் கொண்ட விசயத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்ல வேண்டும் என்கிற முனைப்பில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் மிக எளிதாக வந்து வங்கி பணத்தைக் கொள்ளையடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காட்சிகளில் சற்று சீரியஸ்னஸ் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம்.. .

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், லேசான பொழுதுபோக்கு தேடுபவர்களுக்கு இது ஒரு ஓரளவு ரசிக்கத்தக்க படமாக நிச்சயம் இருக்கும்.
.
.