
நீதிமன்றங்கள் சாமானியர்களின் கடைசி நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கையே விலைபோனால் ? இந்த ஒற்றை வரியை மையமாக வைத்து, ஆன்மீகத்தையும் சமூக அவலத்தையும் கலந்து ஒரு பக்கா கமர்ஷியல் காக்டெய்லாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படத்தின் விரிவான அலசல் இதோ.
நீதிமன்றத்தையே தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு கள்ளத்தனம் மிக்க வழக்கறிஞர்… அவருக்கு சவால் விடும் ஒரு கடவுள்… இதுதான் படத்தின் ஒன்லைன்.
வில்லன் ராஜ்ஜியம்: லஞ்சம், கட்டப்பஞ்சாயத்து, முறைகேடுகள் என நீதிமன்றத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் மாஸ் வழக்கறிஞர் ஆர்.ஜே.பாலாஜி. “என்னை மீறி இங்கே எதுவும் நடக்காது” என்ற பிம்பத்தை அவர் கட்டமைக்கிறார்.
அநீதியால் பாதிக்கப்படுபவர்களின் அழுகுரல் கேட்டு, அந்த நீதிமன்றத்தில் இருக்கும் ‘கருப்புசாமி’ சூர்யா ஆக்ரோஷமாக நேரில் வந்து ஆர்ஜேபாலாஜிக்கு எதிராக களம் இறங்குகிறார்.
“வந்திருப்பது கடவுளே என்றாலும், சிஸ்டத்தை மாற்ற முடியாது. முடிந்தால் சராசரி மனிதனாக மாறி இதை மாற்றி காட்டுங்கள்” என சூர்யாவுக்கு சவால் விடுகிறார் ஆர்ஜே.பாலாஜி. சவாலை ஏற்கும் கருப்புசாமி, ஒரு சாதாரண மனிதனாக (வழக்கறிஞர் சரவணனாக) மாறி நீதித்துறையின் அவலங்களை மாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
ஆர்.ஜே.பாலாஜியா அல்லது சூர்யாவா நாயகன் என்று குழம்பும் அளவிற்கு இருவருக்குமே வெயிட்டான கதாபாத்திரங்கள். அநீதியை அழிக்கும் ‘கருப்புசாமி’யாக திரையில் மிரட்டியிருக்கிறார் சூர்யா. அதே நேரத்தில், வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சாமானிய மனிதனாக வந்து உணர்ச்சிப்பூர்வமான நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.
ஹீரோவாகப் பார்த்து பழகிய ஆர்.ஜே.பாலாஜி, இதில் ‘பேபி கண்ணன்’ என்ற மிரட்டலான வில்லன் வழக்கறிஞராக அவதாரமெடுத்துள்ளார். மாஸ் அறிமுகம், நக்கல் கலந்த வில்லத்தனம் என படம் முழுக்க ஆக்கிரமித்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
த்ரிஷா: வழக்கறிஞராக சில காட்சிகளில் வந்தாலும் துரதிர்ஷ்டவசமாக திரைக்கதையோடு ஒட்டாமல் தனித்து நிற்கிறார்.
நீதிபதியாக வரும் நட்டி மற்றும் நகையைத் தொலைத்துவிட்டு துயரத்தோடு போராடும் இந்திரன்ஸ் ஆகியோர் தங்களின் எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாகவும், ரிச்சாகவும் படமாக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ‘கருப்புசாமி’ என்பதால் சிவப்பு நிறம் ஓவர் டோஸாக உள்ளது.
சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் அனைத்திலும் சத்தமே பிரதானமாக உள்ளது, வார்த்தைகள் புரியவில்லை. கருப்புசாமி பாடலில் கலாச்சார குரலுக்குப் பதில் தொழில்நுட்ப சத்தம் அதிகம். பின்னணி இசை காதை கிழிக்கிறது
இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிமன்றங்களில் நடக்கும் ஊழல்களையும், விலைபோகும் நீதியரசர்களையும், எழுதப்படாத விதிமுறைகளையும் மிக தைரியமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார். இதற்காக அவரைப் பாராட்டலாம்.
இந்த சமூகக் கருத்தை ‘கடவுள்’ என்ற ஃபேண்டஸி பின்னணி இல்லாமல், ஆரம்பத்திலிருந்தே ஒரு சராசரி மனிதனின் தொடர் முயற்சியாகவும், போராட்டமாகவும் மட்டுமே காட்டியிருந்தால், சாமானிய மக்களிடம் இப்படம் இன்னும் ஆழமான மற்றும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்!
மொத்தத்தில்: ஆன்மீக மாஸும், நீதிமன்ற அரசியலும் கலந்த ஒரு வித்தியாசமான முயற்சி









