Reviews

குற்றம் புரிந்தவன் (வெப்சீரிஸ்) ; விமர்சனம்


பெரும்பாலும் அரசாங்க வேலை பார்ப்பவர்கள் தங்கள் பணி காலத்தில் எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் தான் ஓய்வு பெறும்போது நிம்மதியாக ஓய்வு பெற முடியும், கிடைக்கும் பணப்பலன்களை சரியாக பெற முடியும் என்பதால் எந்த பிரச்சனைகளிலும் சிக்கிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். அப்படி ஒரு ஆள் தான் அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரியும் பசுபதி. தனது ஓய்வூதிய பணம் வந்தால் பேரனின் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என நினைக்கிறார்.

அப்படி ஓய்வுபெற போகும் சமயத்தில் எதிர்பாராமல் ஒரு பிரச்சனை அவரை தேடி வருகிறது. இருந்தாலும் அதை மறைக்க முடிவு செய்கிறார். இதனால் அவருடைய குற்ற உணர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகின்றது. இந்த சமயத்தில் காவல்துறை உயர் அதிகாரியிடம் ஓட்டுனராக பணி புரியும் விதார்த்தத்துக்கு இந்த பிரச்சனை பற்றி தெரிய வருகிறது. இந்த பிரச்சனைக்கு காரணமானவர்களை பற்றி அவர் விசாரிக்க துவங்குகிறார்.

அது என்ன பிரச்சனை ? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ? விதார்த்தால் அதை கண்டுபிடிக்க முடிந்ததா ? பசுபதி இந்த சிக்கலில் இருந்து மீண்டாரா என்பது மீதிக்கதை.

ஒரு காலத்தில் வில்லனாக மிரட்டிய பசுபதி தன்னைவிட அப்பாவியாக ஒருவனால் நடிக்க முடியுமா என்று ஏற்கனவே பல படங்களில் நிரூபித்திருக்கிறார். மீண்டும் இந்த வெப்சீரிஸில் ஓய்வு வரப்போகும் ஒரு அரசு ஊழியரின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலித்து எதார்த்தமாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

அவருக்கு உதவும் நபராக வரும் விதார்த் இதுபோன்ற கதாபாத்திரங்களை லட்டு போல தூக்கி சாப்பிடுபவர். வழக்கம் போல அவரது பொறுமை, ஆதங்கம், அப்பாவித்தனம் என தனது கதாபாத்திரத்தில் அனைத்து கலவையான உணர்வுகளையும் பிரதிபலித்து கதையை தாங்கி பிடித்திருக்கிறார்/

பசுபதியின் மனைவியாக வரும் லிஸி ஆண்டனி, லட்சுமி பிரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் தங்களது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மூணார் ரமேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி போன்றவர்களும் தங்களது தேர்வு சரியானது என நிரூபித்து இருக்கின்றனர். மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான வெப் சீரிஸ் தான் இந்த குற்றம் புரிந்தவன்.