
நாயகன் கார்த்தீஸ்வரன் தம்முடன் சில நண்பர்கள் வட்டாரத்தை சேர்த்துக்கொண்டு சதுரங்க வேட்டை பாணியில் மக்களிடம் ஆசையை தூண்டி அதிக வட்டி தருவதாக சொல்லி பைனான்ஸில் பணம் போட சொல்வது, குறைந்த விலையில் செல்போன் தருவதாக சொல்வது என கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்கிறார். ஆனால் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்படி ஒரு முறை அவர் காதல் வயப்படும்போது அவர் காதலியிடமும் தனது கைவரிசையை காட்டுகிறார். ஏமாந்த காதலி, தனது தோழியான போலீஸ் அதிகாரி ஸ்ரீநிதியிடம் இதுபற்றி கூறி அவனை கண்டுபிடிக்க உதவி கேட்கிறார். ஸ்ரீநிதியால் அவரை கண்டுபிடிக்க முடிந்ததா ? இத்தனை கோடிகளை அடித்த கார்த்தீஸ்வரன் எதற்காக இந்த மோசடி வேலையில் ஈடுபடுகிறார் ? அவரது பின்னணி என்ன என்பது மீதிக்கதை.
அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வரும் கார்த்தீஸ்வரன் படத்தின் இயக்குனர் என்பதால் தனது கதாபாத்திரத்தை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து செதுக்கி இருக்கிறார்.. பேராசை பெருநஷ்டம் என்பதை தனது கதாபாத்திரத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் கார்த்தீஸ்வரன்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி கம்பீரமாகவும், கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார். இவர் மிடுக்குடன் கார்த்தீஸ்வரன் மீதான விசாரணையை நடத்தும் விதமே அழகு.
பைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாறும் லிவிங்ஸ்டன் எபிசோட் சென்டிமெண்டாக மனதை தொடுகிறது. ஆதவன், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் ஆகியோர் அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை ஓரளவு நிறைவாக செய்திருக்கிறார்கள்.
பாடல் வரிகளுக்கு தாளம் போட வைத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ், காட்சிகளை கலர்புல்லாகவும், தரமாகவும் படமாக்கியிருக்கிறார்.
இயக்குனர் கார்த்தீஸ்வரன் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு படிப்பினை கொடுக்கும் விதமாக இந்த படத்தை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு துவங்கி, கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்புடன் கொண்டு சென்று இருக்கிறார். மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்தீஸ்வரன்.









