
திடீரென 18 சிறுவர்கள் கடத்தி வைக்கப்பட்டு அணைக்கட்டு பகுதியில் அடைத்து வைக்கப்படுகின்றனர். இவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு சஸ்பெண்ட் ஆன அதிகாரியான கிச்சா சுதீப் கைகளுக்கு வருகிறது. இன்னொரு பக்கம் உடல்நல குறைவில் இருக்கும் முதல்வருக்கு அடுத்தபடியாக அதிகாரத்தை கைப்பற்ற விரும்பும் அவரது மகன் மருத்துவமனையில் தனது தாயை கொல்கிறார்.
இதை அங்குள்ள டாக்டர் ஒருவர் வீடியோவாக எடுக்கிறார். இந்த விவரம் தெரிய வந்ததும் முதல்வரின் மகன், டாக்டரின் வீட்டிற்கு சென்று அந்த செல்போனை கைப்பற்ற முயற்சிக்கிறார். அப்போதுதான் அந்த செல்போனை டாக்டர் மகன் வைத்திருக்கிறார் என்பதும் கடத்தப்பட்ட 18 பேரில் அந்த சிறுவன் ஒருவர் என்பதும் தெரிய வருகிறது.
எதற்காக இந்த 18 பேர் கடத்தப்பட்டார்கள் ? அவர்களை கிச்சா சுதீப் பத்திரமாக மீட்டாரா ? முதல்வரின் மகன் கொலை செய்யும் வீடியோ வெளியானதா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு மீதி கதை விடை சொல்கிறது.
ஆக்ஷன் – அதிரடி ஒருபுறம், ‘பஞ்ச்’ டயலாக்குகள் மறுபுறம் என கிச்சா சுதீப் அமர்க்களப்படுத்துகிறார். சண்டை காட்சிகளிலும் பொறி பறக்க உக்கிரம் காட்டியுள்ளார். ஆக்ஷன் பிரியர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.
வில்லன்கள் நவீன் சந்திரா, விக்ராந்த், குரு சோமசுந்தரம், ஷைன் டாம் சாக்கோ, ஜி.எம்.குமார் ஆகியோர் கேரக்டருக்கேற்ப நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சாலமனாக நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்திருந்தாலும், போதுமான நகைச்சுவை இல்லை..
ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
காந்தாரா புகழ் அஜனீஷ் லோக்நாத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். நிஷ்விகா நாயுடுவின் ‘மஸ்த் மலைக்கா’ ஐட்டம் டான்ஸ், சூப்பர். ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரும் ஆடுகிறது.
தொடக்கம் முதல் இறுதிவரை நாயகன் கிச்சா சுதீப்பை கொண்டாடும் வகையில் காட்சிகள் வசனங்கள் பில்டப்புகள் என அமர்க்களப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திகேயா. குறிப்பாக குழந்தைகளை உயிருடன் மீட்கும் அந்த இரவு நேர காட்சி திகிலுக்கு திகில். பரபரப்புக்கு பரபரப்பு. திரைக்கதையை சுவாரஸ்யமாக வடிவமைத்திருப்பதோடு பிரம்மாண்டமான காட்சிகளின் மூலம் தன்னை மாஸ் பட இயக்குநர் என்று வெளிப்படுத்த முயன்றுள்ளார் இயக்குநர் விஜய் கார்த்திகேயா.









