Reviews

ரெட்ரோ: விமர்சனம்


கங்குவா படத்தின் மிகப்பெரிய தோல்வியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள படம் தான் ‘ரெட்ரோ’. இதுவும் அவருக்கு ஒரு கங்குவா வா ? இல்லை கம்பேக்கா ? வாருங்கள் பார்க்கலாம்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் சூர்யாவை தத்தெடுத்து வளர்க்கின்றனர் ஜோஜு ஜார்ஜ் – ஸ்வாசிகா தம்பதி. சூர்யா மீது வெறுப்புடனே இருக்கும் ஜோஜு ஜார்ஜ், எதிரிகளிடமிருந்து தன் வளர்ப்பு மகன் தன்னை காப்பாற்றிய தருணத்தில் அவரை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறார்.

சில வருடங்களிலேயே ஸ்வாசிகா இறந்துவிட, ஜோஜூ ஜார்ஜ் சூர்யாவை அடியாள் போல் வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் பூஜா ஹெக்டேவை சந்தித்ததும் தனது ரெளடித்தனத்தை விட்டு விட்டுவிட்டு அமைதியாக வாழ விரும்புகிறார். ஆனால், அதே காதலிக்காக தனது வளர்ப்பு அப்பாவின் கையை துண்டாக வெட்டுபவர், அவரது ஆட்களையும் கொலை செய்கிறார். இதனால், அவரிடம் இருந்து பூஜா ஹெக்டே விலகிச்செல்ல, சூர்யா சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்.

திருமணம் நிற்கிறது, காதலியும் கோபித்துக் கொண்டு வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுகிறார். சிறையிலிருந்து ஒரு கும்பலின் உதவியுடன் தப்பித்து தன் காதலியை தேடி புறப்படுகிறார் சூர்யா.. காதலியுடன் அவரால் சேர முடிந்ததா? சூர்யாவை விரட்டும் கும்பலின் பின்னணி என்ன என்பதே ‘ரெட்ரோ’ படத்தின் மீதிக்கதை..

சூர்யா நடிப்பிலும் ஸ்டைலிலும் கலக்கியிருக்கிறார். வில்லன்களை பந்தாடும் ஆக்ரோஷ காட்சிகளிலும், பூஜா ஹெக்டேவின் காதலுக்கு ஏங்கும் காட்சிகளிலும் கவர்கிறார். படத்தின் மொத்த கதையை தனி ஒருவனாக தனது தோளில் தாங்கிச் செல்கிறார் சூர்யா. சூர்யாவுக்கு சிரிப்பே வராது என்கிற கதாபாத்திரம். அதிலும் திருமண வைபவத்தில் உற்சாகமாக நடனமாடும் நேரத்திலும் அவர் முகத்தில் சிரிப்பில்லையே என எழும் கேள்விகளுக்கு விடை படத்தில் இருக்கிறது..

பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாகவும், கதையை நகர்த்திச் செல்லும் மையப்புள்ளியாக அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார். சூர்யா மற்றும் பூஜா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

ஜோஜு ஜார்ஜு வில்லன் கேரக்டரில் நிறைவை தந்திருக்கிறார். காட்சிகள் ஒவ்வொன்றிலும் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே காட்டியிருக்கிறார். வில்லனாக தனது உருவத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார்.

கிங் மைக்கலாக நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து நம்மை அதிகமாகவே சிரிக்க வைத்திருக்கிறார் ஜெயராம்.

சந்தோஷ்நாராயணின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன…பின்னணி இசையில் காட்சிகளின் தன்மையை உயர்த்திக் காட்டியிருக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

அழகான கதை மற்றும் திரைக்கதையைக் கொண்டு இப்படத்தை நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்..குறிப்பாக ரெட்ரோ காலக்கட்ட உலகை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். ஒன்றுக்கு நான்கு கதைகளை வைத்துக்கொண்டு அவற்றை ஒரு புள்ளியில் இணைக்க முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்