Reviews

ஸ்கூல் ; விமர்சனம்


இரண்டாவது இடத்திலுள்ள பள்ளியை முதலிடத்துக்கு கொண்டு வர, மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகத்தை ஹெட் மாஸ்டர் பக்ஸ் பகவதி பெருமாள் எழுதுகிறார். ஆனால், அதை படிக்கும் மாணவர்கள் எதிர்மறை சிந்தனைக்கு ஆளாகின்றனர். இதற்கிடையே, அந்த புத்தகம் மர்மமான முறையில் எரிக்கப்படுவதோடு, பள்ளியின் மாணவர், ஆசிரியர் என சிலர் உயிரிழக்கவும் செய்கிறார்கள்.

காவல்துறை அதிகாரி கே.எஸ்.ரவிக்குமார் விசாரணை மேற்கொள்கிறார். ஆனால், அங்கு நடக்கும் மர்ம சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. ஒரு கட்டத்தில் அவருடைய மகனே ஆவிக்கு இரையாக வேறு வழி இல்லாமல் ஆவியை விரட்டும் வித்யாதரனை அழைக்கிறார்கள். இதற்கிடையே பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட பூமிகா சாவ்லாவையும் யோகி பாபுவையும் மீண்டும் பள்ளி நிர்வாகம் வேலைக்கு எடுத்துக்கொள்ள… மேற்படி பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்தனவா என்பது பின் பாதிக்கதை.

முதல் பாதி முழுவதிலுமே சீனியர் நடிகர்களான யோகிபாபுவும் பூமிகா சாவ்லாவும் இல்லாதது சற்று ஏமாற்றம் தான். இரண்டாம் பாதியில் எட்டிப்பார்த்தாலும் அவர்களுக்கான காட்சிகள் என்பது சற்று குறைவாகவே உள்ளது. ஆனாலும் காமெடியை கச்சிதமாக கையாண்டு, குணச்சித்திர நடிப்பில் ஆசிரியர் யோகி பாபு கவனத்தை ஈர்த்துள்ளார்.

வெற்றி, தோல்வி மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற அறிவுரையை மாணவர்களுக்கு வழங்கும் பூமிகா சாவ்லாவின் கேரக்டர் சிறப்பு வாய்ந்தது..

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், உதவி தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் சாம்ஸ், மந்திரவாதி மஸ்தான் வேடத்தில் நடித்திருக்கும் நிழல்கள் ரவி, உலகநாத சுவாமியாக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன், ஆசிரியைகள் வேடத்தில் நடித்திருக்கும் இரண்டு நடிகைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வேடத்தில் நடித்திருப்பவர்கள் என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

படத்திற்கு பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார் இளையராஜா. வழக்கம்போல் பின்னணி இசையில் தன் முத்திரையை பதிக்க தவறவில்லை ராஜா. முழு படமும் ஒரு பள்ளியிலேயே நடக்கிறது என்றாலும் பள்ளி கட்டடத்தையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை அலுப்பு தட்டாத வகையில் படமாக்கிய ஒளிப்பதிவாளர் ஆதித்யா கோவிந்தராஜன் பணி பாராட்டுக்குரியது.

படத்தை இயக்கியிருக்கும் ஆர்.கே. வித்யாதரனே படத்தில் ஆவிகளை ஓட்ட வரும் மந்திரவாதியாகவும் வருகிறார். மாணவ, மாணவிகளிடையே என்ன மாதிரியான திறமை இருக்கிறது என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொண்டு அவர்களை அதற்கு ஏற்றாற்போல் பயிற்சி செய்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதே சாலச்சிறந்தது என்பதை இயக்குனர் இப்படத்தின் மூலம் கூறியிருக்கிறார் ஆவிகளை விடக் கொடுமையான விஷயமான சாதிப் பேயையும் உள்ளே கொண்டு வந்து சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தை விதைத்திருப்பதால் இயக்குனர் வித்யாதரனை பாராட்டலாம்..