Reviews

வித் லவ் ; விமர்சனம்


காதல் கதைகளில் பலவிதமாக காதலை சொல்லி ஆகிவிட்டது. அடுத்து அதில் ஏதாவது புதுமையாக சொன்னால்தான் இன்றைய இளைஞர்கள் ரசிப்பார்கள். அப்படி இந்த வித் லவ் படத்தில் என்ன புதுமை செய்திருக்கிறார்கள்.. பார்க்கலாம்.. வாருங்கள்.

நாயகன் அபிஷன் ஜீவிந்துக்கு நாயகி அனஸ்வரா ராஜனை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். இருவரும் ஒரு காபி ஷாப்பில் சந்தித்து பேசும்போது தான், தாங்கள் இருவருமே ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதும் நாயகன் நாயகிக்கு சீனியர் என்பதும் தெரிய வருகிறது. அப்போது தங்களுக்கு பள்ளியில் ஏற்பட்ட முதல் காதலையும் அதை சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டதையும் இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.

அதனால் தங்கள் திருமணத்திற்கு முன்னதாக, தாங்கள் யாரை முதன்முதலாக காதலித்தோமோ அவர்களிடம் உங்களை காதலித்தோம் என்கிற விஷயத்தையாவது தெரியப்படுத்தி விட்டு வந்து விடுவோம், அதன்பிறகு திருமணம் செய்து கொள்வோம் என இருவரும் ஒரு மனதாக முடிவு செய்து கிளம்புகிறார்கள். அப்படி அவர்கள் தங்கள் முதல் காதல் ஏற்பட்ட நபர்களிடம் அந்த விவரத்தை சொன்னார்களா ? அதனால் ஏதேனும் புதிய குழப்பங்கள் உருவானதா ? இல்லை இவர்களது திருமணத்தில் ஏதேனும் புதிய பிரச்சனை உருவானதா என்பது மீதி கதை.

நாயகன் அபிஷன் ஜீவிந்த், பள்ளிப் பருவம் மற்றும் இளமை பருவம் என இரண்டு தோற்றங்களுக்கும் கச்சிதமாக பொறுந்துவதோடு, நடிப்பின் மூலமாகவும் தன்னை ரசிக்க வைத்திருக்கிறார். ஒரு இளைஞனின் குழப்பம், கோபம், பொறாமை, தவிப்பு ஆகியவற்றை மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்

ஒரு துள்ளலான நவீன காலத்துப் இன்றைய பெண்களின் பிரதிபலிப்பு. தெளிவான சிந்தனை, எதார்த்தத்தை எதிர்கொள்ளும் குணம் மற்றும் தனது கருத்துக்களைத் தயக்கமின்றி முன்வைக்கும் ஒரு பெண்ணாக மிக இயல்பாக நடித்திருக்கிறார் அனஸ்வரா ராஜன்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் தேனி முருகன், பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன், நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், நாயகியின் பள்ளி தோழிகளாக நடித்திருக்கும் டிம்பிள் கண்ணா, சாச்சனா, அக்காவாக நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரும் மனதில் இடம்பிடிக்கிறார்கள்.

இசையமைப்பாளர்ஷான் ரோல்டன் பாடல்களில் விட்ட கோட்டையை பின்னணி இசையில் பிடித்து விடுகிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா யூனிபார்ம் மாட்டி நம்மையும் பள்ளிப்பருவ காலத்துக்கே கொண்டு சென்று விடுகிறது.

பள்ளி வாழ்க்கையில் நடந்த முதல் காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் மதன். கலகலப்போடும், ரசனையோடும் இளம் தலைமுறையினரை மட்டுமின்றி அனைவரையும் பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்லும் விதமாக படத்தை கொடுத்து இருக்கிறார்.