Reviews

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ; விமர்சனம்


வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ரசிகர்களை கவர்கிறதா ? பார்க்கலாம்.

பெரிய தொழிலதிபர் சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), திருமணமாகாதவர். தன் தாயின் விருப்பத்திற்காக வாரிசு தேவை என்ற சூழலுக்குத் தள்ளப்படுகிறார். அவரது வாழ்க்கையில் ஒரு குழந்தை மற்றும் மமிதா பைஜூவின் வருகைக்குப் பிறகு ஏற்படும் மாற்றங்களே கதையின் மையம்.

ஒரு முதிர்ந்த நடிகராக, சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா மிக நேர்த்தியாகவும், நிதானமாகவும் நடித்துள்ளார். தொழிலதிபர், தந்தை, மகன் ஆகிய பரிமாணங்களை மிகச் சரியாகக் கையாண்டுள்ளார். நகைச்சுவைக் காட்சிகளிலும் அவரது டைமிங் பிரமாதம்.

‘மேடி’ கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். துடிப்பான, அதே சமயம் உணர்வுப்பூர்வமான நடிப்பால் திரையில் ஒளிர்கிறார். இவருக்கும் சூர்யாவிற்குமான கெமிஸ்ட்ரி நன்றாகப் பொருந்தியுள்ளது.

அம்மாவாக ராதிகா சரத்குமார், நிர்மலா தேவி என்ற கதாபாத்திரத்தில் தனது அனுபவமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். தாயாக அவர் வரும் காட்சிகள் நெகிழ்ச்சி.

படம் விஷுவலாக அழகாக இருக்கிறது. ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷின் இசையும் குடும்பப் படத்திற்குத் தேவையான உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. எனினும், படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை பலவீனமாக இருந்ததால், தொழில்நுட்பத் திறமை முழுமையாகப் பயன்படவில்லை என்றே சொல்லலாம்.

குடும்ப உறவுகளையும், நவீன சமூகத்தின் போக்குகளையும் மென்மையாகக் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. குறிப்பாக வயது வித்தியாசத்தையோ, வாடகைத் தாய் முறையையோ ஒரு பெரிய சிக்கலாகப் பார்க்காமல், மனித உறவுகளின் ஆழத்தை அணுகிய விதம் சிறப்பு.. முதல் பாதி மிகவும் கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலவீனம் இரண்டாம் பாதி. திரைக்கதை மெதுவாகச் செல்வதுடன், தேவையற்ற உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் சில தர்க்கமற்ற துணைக்கதைகள் படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன. படத்தின் நீளமும், திரைக்கதையில் இருந்த குழப்பமும் கதையின் ஓட்டத்தைத் தடுத்துள்ளது.

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஒரு சின்சியரான குடும்பக் கதை தான். சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் நடிப்பு இப்படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், சூப்பர் என்று சொல்லக்கூடிய ஒரு குடும்பத் திரைப்படமாக மாறி இருக்கும்..