
மூன்று இளைஞர்கள் வாடகைக்கு வசித்து வந்த வீட்டில், அவர்களில் ஒருவன் மற்ற இருவரையும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொள்கிறான். அந்த சம்பவத்திற்குப் பிறகு பேய் வீடு என்ற முத்திரையுடன் பல ஆண்டுகள் காலியாக கிடக்கும், பாக்யராஜுக்கு சொந்தமான அந்த வீட்டில், குறைந்த வாடகைக்காகவும் அதன் பின்னணியை அறிந்தும் குடியேறுகிறார் அஜய் கார்த்திக். ஆரம்பத்தில் எதற்கும் அஞ்சாத தைரியமான இளைஞராக இருக்கும் அவர், நாட்கள் நகர நகர அந்த வீட்டில் நிகழும் புரியாத சம்பவங்களால் மனதளவில் சிதைந்து போகிறார். ஆனாலும் பாக்யராஜ் அந்த வீட்டை விற்கும் வரை பொறுமை காக்க நினைக்கிறார் அஜய் கார்த்தி.
ஒரு கட்டத்தில், தன்னைத்தானே கொடூரமாக தாக்கிக் கொண்டு அஜய் உயிரிழக்கிறார். அதே நேரத்தில் வீட்டு உரிமையாளரான கே.பாக்யராஜும் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். விசாரணைக்காக வரும் காவல் அதிகாரி நட்டி, சடலங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கும் வேளையில், இறந்ததாக கருதப்பட்ட அஜய் திடீரென உயிர் பெற்று எழுந்து, நட்டியை எச்சரித்து மீண்டும் மயங்கி விழுவது கதையை முற்றிலும் வேறு திசைக்கு இழுத்துச் செல்கிறது.
அந்த எச்சரிக்கையின் பின்னணி என்ன? வீட்டில் நிகழும் அமானுஷ்ய சம்பவங்களின் உண்மை என்ன? பல ஆண்டுகளாக தொடரும் மர்ம மரணங்களுக்கு காரணம் யார்? என்ற கேள்விகளுக்கான பதில்களை, ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்தை அதிகரித்தபடி சொல்லுகிறது ‘டார்க்’.
தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றாலே காமெடி கலந்த திகில் என்ற வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த வழக்கத்திலிருந்து விலகி, முழுக்க முழுக்க பதட்டத்தையும் அச்சத்தையும் நம்பி நகரும் திரைப்படமாக ‘டார்க்’ தனித்துவம் பெறுகிறது. தேவையற்ற நகைச்சுவை, சத்தம் அல்லது வழக்கமான பேய் விளையாட்டுகள் இல்லாமல், மனதை அழுத்தும் சூழ்நிலைகளின் மூலமே பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் முயற்சியில் படம் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறது.
நாயகனாக நடித்துள்ள அஜய் கார்த்திக், ஆரம்பத்தில் தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்ளும் இளைஞராகவும், பின்னர் அமானுஷ்ய அனுபவங்களால் மனநிலை மாறும் மனிதராகவும் இரு பரிமாணங்களையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பயம், குழப்பம், மன அழுத்தம் ஆகிய உணர்வுகளை கண்களாலும் உடல் மொழியாலும் கடத்தும் விதம் அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது.
நட்டி, காவல்துறை அதிகாரியாக வழக்கமான விசாரணையிலிருந்து மர்மத்தின் ஆழத்தை நோக்கி நகரும் கதாபாத்திரத்தில் தனது அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் தருணங்களில் அவரது நடிப்பு கதைக்கு நம்பகத்தன்மையையும் விறுவிறுப்பையும் கூட்டுகிறது.
வீட்டு உரிமையாளராக வரும் கே.பாக்யராஜ், குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் தனது அனுபவமிக்க நடிப்பாலும் இயல்பான திரை இருப்பாலும் கதையின் முக்கிய அங்கமாக மாறுகிறார். அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்குக் கிடைத்த காட்சிகளில் கதைக்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, ஒரு வீட்டை மையமாகக் கொண்ட கதையை காட்சிப்படுத்திய விதம் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இருட்டை மட்டும் காட்டாமல், அந்த இருளுக்குள் ஏதோ பதுங்கி இருப்பது போன்ற உணர்வை ஒளி அமைப்பின் மூலம் உருவாக்கியிருக்கிறார். குறைந்த வெளிச்சம், நீளமான ஷாட்கள், எதிர்பாராத கேமரா கோணங்கள் ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் திகில் நிறைந்த சூழலை உருவாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் மனு ரமேஷ், வழக்கமான அதிக சத்தம் எழுப்பும் திகில் இசையை தவிர்த்து, மெளனத்தையும் மெல்லிய ஒலிகளையும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியிருக்கிறார். இதனால் பார்வையாளர்களின் கவனம் முழுவதும் திரையில் நிலைத்து, ஒவ்வொரு சிறிய சத்தமும் கூட பயத்தை அதிகரிக்கும் அனுபவமாக மாறுகிறது. பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எழுத்து, இயக்கம் ஆகிய இரண்டையும் கவனித்துள்ள கல்யாண் கே. ஜெகன், வழக்கமான பேய் கதையை உளவியல் திகில் கோணத்தில் சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டத்தக்கது. மனித மனத்தின் பயத்தை மையமாக வைத்து, மர்மங்களை படிப்படியாக அவிழ்க்கும் திரைக்கதை படத்தின் மீது ஆர்வத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது. குறிப்பாக இறுதிக்கட்டத்தில் மர்மங்களுக்கான விளக்கத்தை எதிர்பாராத வகையில் அமைத்திருப்பது படத்திற்கு கூடுதல் மதிப்பை அளிக்கிறது.
அதே நேரத்தில், கதை பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள் சுழல்வதும், சில இடங்களில் தர்க்க ரீதியான கேள்விகள் எழுவதும் படத்தின் குறைகளாகத் தெரிகின்றன. இருப்பினும், பேயை நேரடியாக காட்டுவதை விட மனித மனத்தில் பயத்தை விதைக்கும் அணுகுமுறையும், நொடிக்கு நொடி பதட்டத்தை அதிகரிக்கும் காட்சிகளும் அந்த குறைகளை பெருமளவில் மறைத்து விடுகின்றன.
மொத்தத்தில், ‘டார்க்’ வழக்கமான பேய் படங்களிலிருந்து விலகி, உளவியல் ரீதியான அச்சத்தையும், இறுக்கமான திரைக்கதையையும் நம்பி பயணிக்கும் தரமான திகில் திரைப்படம். பயம் என்பது வெறும் பேயில் இல்லை, மனித மனதில்தான் இருக்கிறது என்பதை வலுவாக உணர்த்தும் இந்த படம், திகில் ரசிகர்களுக்கு நிச்சயம் திருப்தியான அனுபவத்தை வழங்கும்.









