
இன்றைய காதல் உறவுகளின் பின்னணியில் இருக்கும் பொருளாதார சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது லவ் ஓ லவ் திரைப்படம்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ரகுவரன் (பவிஷ்), தனது காதலியான அவந்திகாவை (நாகதுர்கா) நான்கு ஆண்டுகளாக காதலிக்கிறார். காதலியின் ஆசைகள் மற்றும் தனது அன்பை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து செலவு செய்து, சுமார் பதினைந்து லட்சம் ரூபாய் கடனில் சிக்கிக் கொள்கிறார். இதன் காரணமாக குடும்பத்திலும், வேலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார். இறுதியில் இந்த காதல் போலீஸ் நிலையம் வரை செல்வதுடன் கதை புதிய திருப்பத்தை எடுக்கிறது.
தன்னை நான்கு ஆண்டுகள் மனரீதியாக துன்புறுத்திய காதலி, அதே வேதனையை நான்கு மாதங்களாவது அனுபவிக்க வேண்டும் என்று ரகுவரன் வைக்கும் நிபந்தனையே படத்தின் மையக்கருவாக மாறுகிறது. அந்த நிபந்தனையை அவந்திகா ஏற்றுக்கொண்ட பிறகு இருவரின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இறுதியில் காதல் வெற்றி பெறுகிறதா, தவறு யாருடையது, காதல் என்பது வெறும் உணர்வா அல்லது பொறுப்பா என்ற கேள்விகளுக்கு படம் பதில் சொல்ல முயல்கிறது.
இன்றைய தலைமுறையின் காதல், செலவு, கடன் மற்றும் உறவுகளின் நிஜ முகத்தைப் பேசும் படைப்பாக லவ் ஓ லவ் அமைந்துள்ளது.
நாயகனாக நடித்துள்ள பவிஷ், காதலால் வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளும் இளைஞனின் மனநிலையை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். காதலுக்காக பணத்தை வாரி இறைத்து பின்னர் கடன் சுமையில் தவிக்கும் காட்சிகளிலும், காதலியிடம் கோபம், ஏமாற்றம் மற்றும் பழிவாங்கும் எண்ணம் கலந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணங்களிலும் சிறப்பாக நடித்துள்ளார். சில இடங்களில் அவரது நடிப்பில் நடிகர் தனுஷின் சாயல் தெரிந்தாலும், இளமையான துடிப்பும் ஆற்றலும் கொண்ட கதாநாயகனாக ரசிகர்களை கவர்கிறார்.
நாயகியாக நடித்துள்ள நாகதுர்கா, அவந்திகா கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார். பணத்தின் மதிப்பை அறியாத, உணர்ச்சிவசப்பட்ட இளம்பெண்ணாகவும், பின்னர் தனது தவறுகளை உணர்ந்து மனம் மாறும் தருணங்களிலும் அவர் கவனம் ஈர்க்கிறார். செல்வராகவன் போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான தோற்றத்தில் வந்து படத்திற்கு விறுவிறுப்பை சேர்க்கிறார். வனிதா விஜயகுமார், கே.எஸ். ரவிக்குமார், சவுந்தர்யா மற்றும் ரம்யா ஆகியோரும் தங்களுக்குக் கிடைத்த இடங்களில் கதைக்கு தேவையான ஆதரவை வழங்கியுள்ளனர்.
இசையமைப்பாளர் பாக்சன் படத்தின் இளமைத் துடிப்புக்கு ஏற்ற இசையை வழங்கியுள்ளார். குறிப்பாக ‘வாடி பொட்டப்புள்ள’ ரீமிக்ஸ் பாடல் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசையிலும் காதல் மற்றும் உணர்ச்சி காட்சிகளுக்கு தேவையான ஆதரவை அவர் கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா நகர்ப்புற இளைஞர்களின் வாழ்க்கை முறையையும் காதல் காட்சிகளையும் அழகாக பதிவு செய்துள்ளார். வண்ணமயமான காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளின் காட்சியமைப்பு படத்தின் ரொமான்டிக் உணர்வை அதிகரிக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக படத்திற்கு அவரது ஒளிப்பதிவு ஒரு பலமாக அமைந்துள்ளது.
இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன், ஒரு சாதாரண காதல் கதையை மட்டுமே சொல்லாமல் அதன் பின்னணியில் இருக்கும் பொருளாதார நெருக்கடிகளையும் பேச முயற்சித்துள்ளார். காதலில் பொறுப்பு இல்லாத செயல்கள் எவ்வளவு பெரிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை அவர் திரைக்கதையின் மூலம் வலியுறுத்துகிறார். காதல் உறவுகளில் பணத்தின் பங்கு, நேரத்தின் மதிப்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அவசியம் ஆகியவை படத்தின் முக்கிய கருத்துகளாக இருக்கின்றன. பவிஷ் மற்றும் நாகதுர்காவின் நடிப்பு, சில உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் சமகால பிரச்சினையை பேசும் கரு ஆகியவை படத்தின் பலங்களாக அமைந்துள்ளன.
அதே நேரத்தில் திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் இல்லாதது குறையாகிறது. பல காட்சிகள் நீளமாக பேசிக்கொண்டே செல்வதால் சலிப்பு ஏற்படுகிறது. சில இடங்களில் கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் மிகைப்படுத்தப்பட்டதாக தெரிகின்றன. காதல் காட்சிகளில் தேவையான உணர்ச்சி தாக்கம் குறைவாக இருப்பதும் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இன்றைய காதல் உறவுகளில் பொறுப்புணர்வின் அவசியத்தை பேசும் ஒரு வித்தியாசமான முயற்சியாக லவ் ஓ லவ் கவனிக்கத்தக்க திரைப்படமாக அமைகிறது.









