
வெளி உலகத் தொடர்பே இல்லாமல் மலைப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை, அவர்கள்மீது நடக்கும் சுரண்டல், கல்வி இல்லாததால் அவர்கள் சந்திக்கும் துயரங்கள் ஆகியவற்றை கதையின் தொடக்கத்திலேயே இயக்குநர் கணேஷ் விநாயகன் பதிவு செய்கிறார்.
அந்த கிராமத்தில் வாழும் சிறுமி குறிஞ்சி, தன் சமூகத்தின் எதிர்காலம் கல்வியில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, ஒரு பள்ளியை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் மாவட்ட ஆட்சியரைத் தேடி மலையிலிருந்து நகரத்திற்கு தனியாக புறப்படுகிறாள். சிறுமியின் பயணம், அவள் எதிர்கொள்ளும் ஆபத்துகள், அதிகார அமைப்புகளின் அலட்சியம் மற்றும் இறுதியில் மாவட்ட ஆட்சியர் முத்துவேல் அந்தக் குழந்தையின் கோரிக்கையை ஏற்று மலைக் கிராமத்திற்கு கல்வியை கொண்டு செல்ல மேற்கொள்ளும் போராட்டம் ஆகியவை படத்தின் இரண்டாம் பாதியை நகர்த்துகின்றன. கல்விக்கான உரிமையை வலியுறுத்துவதோடு, மனிதநேயம், பொறுப்பு உணர்வு மற்றும் சமூக மாற்றத்தின் அவசியத்தையும் திரைப்படம் அழுத்தமாகச் சொல்கிறது. மெலோடிராமா கலந்த திரைக்கதையாக இருந்தாலும், அதன் அடிப்படை கருத்து மனதில் பதியும் வகையில் அமைந்துள்ளது.
அருள்நிதி படத்தின் இரண்டாம் பாதியில் மாவட்ட ஆட்சியர் முத்துவேலாக தோன்றி தனது அளவான, முதிர்ச்சியான நடிப்பால் கதைக்கு உறுதியான முதுகெலும்பாக மாறுகிறார். குறைவான திரை நேரம்தான் இருந்தாலும், அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் கதைக்கு தேவையான நம்பிக்கையையும், உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறார். கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் இயல்பாக கையாண்டிருப்பது அவரது பலமாக அமைந்துள்ளது.
ஆரவ் பழங்குடி இளைஞனாக மிகவும் நம்பகமான நடிப்பை வழங்கியிருக்கிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு, உணர்ச்சி வெளிப்பாடு என அனைத்திலும் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ரம்யா பாண்டியன் தாயாக அமைதியான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார்.
படத்தின் உண்மையான நாயகி குழந்தை நட்சத்திரம் பேபி கிருத்திகா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிஞ்சி கதாபாத்திரத்தில் அவரது இயல்பான நடிப்பு, கண்களில் தெரியும் ஏக்கம், கல்விக்காக போராடும் உறுதி ஆகியவை பார்வையாளர்களை உருக வைக்கின்றன. பல காட்சிகளில் அவர் ஒருவரே முழுப் படத்தையும் தாங்கிச் செல்கிறார்.
ஜான் விஜய் எதிர்மறை சாயலுடைய கதாபாத்திரத்தில் தனது அனுபவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். காளி வெங்கட் கதையின் தீவிரத்தை குறைக்காமல் இயல்பான நகைச்சுவையையும், மனிதநேயத்தையும் சேர்க்கிறார். விடிவி கணேஷ் குறைந்த நேரத்தில் வந்தாலும் தனது வழக்கமான பாணியில் கதைக்கு இலகுவான தருணங்களை வழங்குகிறார்.
ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் மலைப்பகுதிகளின் இயற்கை அழகையும், பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அகன்ற இயற்கைக் காட்சிகளும், குழந்தையின் தனிமையான பயணமும் அவரது கேமரா வழியாக உயிர் பெறுகின்றன. எந்த ஆடம்பரமும் இல்லாத காட்சியமைப்புகள் படத்தின் யதார்த்தத்தை அதிகரிக்கின்றன.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்தின் உணர்ச்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை பல காட்சிகளில் தாக்கத்தை அதிகரிக்கிறது. பாடல்கள் கதையின் ஓட்டத்துடன் ஒன்றிப்போகும் வகையில் அமைந்துள்ளன.
இயக்குநர் கணேஷ் விநாயகன், ‘தேன்’ படத்தைப் போலவே மீண்டும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து, கல்வியின் அவசியத்தை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். பழங்குடி மக்களின் வாழ்க்கை, அவர்களின் கலாச்சாரம், குழந்தைகளின் கல்வி மீதான ஏக்கம் ஆகியவற்றை நேர்மையாக பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது. வணிக அம்சங்களை அதிகம் திணிக்காமல், கதையின் நோக்கத்தை இறுதிவரை கைவிடாமல் சென்றிருப்பது படத்தின் மிகப்பெரிய பலமாகும்.
அதே நேரத்தில் திரைக்கதை பல இடங்களில் ஒரே மாதிரியான துயர சம்பவங்களை அடுக்கிக்கொண்டே செல்வதால் உணர்ச்சியின் தாக்கம் ஒரு கட்டத்தில் குறைகிறது. சில காட்சிகள் இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. சில துணைக் கதாபாத்திரங்களுக்கு போதிய ஆழம் இல்லாததும், இரண்டாம் பாதையில் சில திருப்பங்கள் முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக இருப்பதும் குறைகளாகத் தெரிகின்றன.
இருந்தாலும் கல்வியின் முக்கியத்துவத்தை மனதைத் தொடும் விதத்தில் எடுத்துரைக்கும் நேர்மையான முயற்சியாக அருள்வான் கவனம் பெறுகிறது. அருள்நிதியின் வித்தியாசமான கதைத்தேர்வு, பேபி கிருத்திகாவின் அற்புதமான நடிப்பு, எம். சுகுமாரின் ஒளிப்பதிவு, ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை மற்றும் கணேஷ் விநாயகனின் சமூக அக்கறை கொண்ட இயக்கம் ஆகியவற்றுக்காக இந்தப் படத்தை நிச்சயம் ஒருமுறை ரசிக்கலாம்









