
திருச்சியில் தனது மாமாவுடன் வசித்து வளரும் இதயா என்ற இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் மலரும் மூன்று காதல்களே இதயம் முரளி படத்தின் மையக்கதை. பள்ளிப் பருவத்தில் தனது ஆசிரியையான கீதா மீது ஏற்படும் ஈர்ப்பு, பின்னர் டியூஷன் வகுப்பில் சந்திக்கும் சாம் என்ற பெண்ணின் மீது மலரும் காதல் என ஒவ்வொரு கட்டத்திலும் தனது காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார். ஒவ்வொரு முறையும் காதலை வெளிப்படுத்த நினைக்கும் நேரத்தில் எதிர்பாராத திருப்பங்கள் அவரது வாழ்க்கையை வேறு பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.
பின்னர் கல்லூரி வாழ்க்கையில் மருத்துவ மாணவியான அமுதாவை சந்திக்கும் இதயா, இந்த முறையாவது தனது காதலை வெளிப்படுத்த முடியுமா என்ற எதிர்பார்ப்பை படம் உருவாக்குகிறது. காதல் தோல்விகள், நட்பு, பிரிவு மற்றும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் ஒரு இளைஞனின் உணர்வுப் பயணத்தை, 1990-கள் மற்றும் 2000-களின் நினைவலைகளுடன் இணைத்து சொல்ல முயல்கிறது இந்த திரைப்படம். இறுதியில் அவரது காதல் யாரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, அவர் அமெரிக்கா செல்லும் காரணம் என்ன, சிறப்புத் தோற்றத்தில் வரும் ஃபஹத் பாசிலின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
அதர்வா முரளி, தனது தந்தை முரளியை நினைவுபடுத்தும் வகையில் ஒரு காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் இளைஞனாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். பள்ளி மாணவன் முதல் கல்லூரி இளைஞன் வரை பல வயது பரிமாணங்களை தனது உடல்மொழி மற்றும் முகபாவனைகளால் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்துகிறார். காதலில் தோல்வியடையும் தருணங்களிலும், தயக்கத்தால் தவிக்கும் காட்சிகளிலும் அவரது நடிப்பு படத்தின் முக்கிய பலமாக அமைகிறது.
ப்ரீத்தி முகுந்தன் சாம் கதாபாத்திரத்தில் அழகாலும், இயல்பான நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார். காதல் காட்சிகளில் அவரது நடிப்பு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. கயாடு லோஹர் குறைந்த காட்சிகளில் மட்டுமே வந்தாலும், தனது மென்மையான திரைநடையால் மனதில் பதிகிறார். ஜோனிட்டா காந்தி ஆசிரியையாகவும், நட்டி மாமா கதாபாத்திரத்திலும், பரிதாபங்கள் சுதாகர், ரக்ஷன், டிராவிட் செல்வம், தமன், நிஹாரிகா, ரைசா வில்சன், சின்னி ஜெயந்த், பப்லு பிரித்விராஜ் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த இடங்களில் கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். கிளைமாக்ஸில் சிறப்புத் தோற்றத்தில் வரும் ஃபஹத் பாசில் ரசிகர்களிடம் கைதட்டல்களை பெற்றாலும், அவரது கதாபாத்திரம் இன்னும் வலுவாக எழுதப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
இசையமைப்பாளர் எஸ். தமன் படத்திற்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறார். குறிப்பாக பின்னணி இசை காதல், பிரிவு மற்றும் நினைவலைகள் கலந்த காட்சிகளின் உணர்வை அதிகரிக்கிறது. ‘இதயா’ பாடலும், இடைவேளையில் இடம்பெறும் ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ பாடலும் படத்தின் உணர்ச்சி தாக்கத்தை உயர்த்துகின்றன.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா 1990-களின் மற்றும் 2000-களின் காலகட்டத்தை வண்ணமயமான காட்சிகளாக திரையில் பதிவு செய்துள்ளார். பள்ளி, டியூஷன், கல்லூரி மற்றும் காதல் நினைவுகளை பார்வையாளர்கள் மீண்டும் அனுபவிக்கும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பது அவரது உழைப்பை வெளிப்படுத்துகிறது.
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், ஒரு இளைஞனின் சொல்லப்படாத காதல்களை மையமாகக் கொண்டு மனதிற்கு இதமான படத்தை உருவாக்க முயன்றுள்ளார். 90-களின் நாஸ்டால்ஜியாவை திரையில் உயிர்ப்பிக்க அவர் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. காதல், நட்பு, இளமைக்கால நினைவுகள் மற்றும் சொல்ல முடியாத உணர்வுகளை படம் பேசுகிறது. அதே நேரத்தில், மூன்று காதல் அத்தியாயங்களுக்கும் தேவையான ஆழம் இல்லாதது படத்தின் முக்கிய குறையாக மாறுகிறது. இரண்டாம் பாதியில் தேவையற்ற காட்சிகள் மற்றும் வலிந்து திணிக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் திரைக்கதையின் ஓட்டத்தை பாதிக்கின்றன.
சில கதாபாத்திரங்களின் முடிவுகளுக்கான காரணங்கள் அழுத்தமாக சொல்லப்படாததால் பல கேள்விகள் எழுகின்றன. பல கேமியோ தோற்றங்கள் கதையோடு முழுமையாக இணைவதில்லை. இருந்தபோதிலும் நகைச்சுவை, வண்ணமயமான காட்சிகள், நடிகர்களின் இயல்பான நடிப்பு மற்றும் தமனின் இசை ஆகியவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன. ரத்தம், வன்முறை இல்லாமல் மனதிற்கு இதமான ஒரு காதல்-நகைச்சுவை படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு இதயம் முரளி ஒரு சுமாரான, ஆனால் ரசிக்கக்கூடிய அனுபவமாக அமைகிறது.









