Reviews

மொத ராத்திரி ; விமர்சனம்


வெளிநாட்டில் வேலை பார்க்கும் மருதநாயகம் (ரிஷிகாந்த்), தன் காதலி தற்கொலை செய்துகொண்ட சோகத்தாலும், திருமணத்தின் மீதுள்ள வெறுப்பாலும் ஊருக்கு வர மறுக்கிறார். ஆனால் குடும்பத்தினர் குழந்தைக்கு காதுகுத்து என்று பொய் சொல்லி அவரை ஊருக்கு வரவழைத்து, வற்புறுத்தி முத்துச்செல்விக்கு (அனிஷ்மா அனில்குமார்) திருமணம் செய்து வைக்கின்றனர். மறுபுறம், முத்துச்செல்விக்கு வேறு ஒரூவருடன் காதல் இருப்பதால், முதலிரவு அன்று வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிடுகிறார்.

இந்த உண்மை மருதுவுக்கு தெரியவர, தான் விரும்பாத வாழ்க்கை அமைந்தது போல, பிடித்தவருடன் இவளாவது போய் வாழட்டுமே என்று தன் மனைவியை அவளது காதலனுடனேயே சேர்த்து வைக்க முயல்கிறார் மருது. ஆனால், காதலனோ சரியான நேரத்தில் வராமல் கைவிட்டுவிட, நட்டாற்றில் நிற்கும் நாயகிக்கு நாயகன் எப்படி துணையாக நிற்கிறான், அதன்பிறகு அந்த இரவில் என்னென்ன குழப்பங்களும் கலகலப்பான சம்பவங்களும் நடக்கிறது என்பதே இப்படத்தின் கதை.

படம் முழுவதும் வரும் கதாபாத்திரங்களின் தேர்வு மற்றும் அவர்களின் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. குணசித்திர வேடங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த், ஒரு நாயகனாக தனது பொறுப்பை உணர்ந்து பக்குவமாகவும் அளவோடு நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

கதாநாயகியாக நடித்துள்ள அனிஷ்மா, முதல் பாதியில் அமைதியாக வந்து, இரண்டாம் பாதியில் தனது உணர்ச்சிகரமான நடிப்பாலும், இறுதிக்காட்சியில் தனது நீண்ட நாள் ஏக்கங்களையும் வலிகளையும் வெளிப்படுத்தும் இடத்திலும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவர்களுடன் மாமாவாக வரும் அப்துல் லீ, பகவதி பெருமாள், சேத்தன், ஏ.வெங்கடேஷ் மற்றும் ஷெல்லி உள்ளிட்ட பலரும் கிராமத்து மனிதர்களின் இயல்பான சண்டைகள், கிண்டல்கள் மற்றும் வம்புகளை கண்முன்னே நிறுத்தி வயிறுகுலுங்க சிரிக்க வைத்துள்ளனர். குறிப்பாக, மணப்பெண்ணின் காதலனாக இயக்குனர் ராஜா கருப்பசாமியே வந்து சில கலகலப்பான காட்சிகளில் கலக்கியுள்ளார்.

பரத் சங்கரின் இசையில் பாடல்களும், குறிப்பாக ‘டை டக்கா’ போன்ற முணுமுணுக்க வைக்கும் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளன.

கிராமத்து திருமண வீட்டின் ஆரவாரத்தையும், நள்ளிரவு நேரத்து சூழலையும் ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி மிகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் தன் கேமராவில் பதிவு செய்துள்ளார்.

பல கதாபாத்திரங்கள் ஒரே இரவில் வந்து சென்றாலும், எடிட்டர் அசோக் அர்ஜுன் குழப்பமில்லாமல் கதையின் ஓட்டம் குறையாதவாறு காட்சிகளைத் தொகுத்துள்ளார்.

இயக்குனர் ராஜா கருப்பசாமி, ஒரு திருமண வீட்டின் பின்புறம் நடக்கும் ஈகோ சண்டைகள், உறவினர்களின் கிண்டல்கள் மற்றும் முதலிரவு நாளில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களை எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் வெகு இயல்பாக கையாண்டுள்ளார். நகைச்சுவையோடு சேர்த்து பெண்களின் ஒடுக்கப்பட்ட நிலை, காதல் மற்றும் திருமணத்தின் நிதர்சனம், சாதிய மனநிலைகள் போன்ற சமூகக் கருத்துக்களையும் கதையோடு உரசிச் செல்லும் வகையில் இயக்கியுள்ளது பாராட்டுக்குரியது.

கிராமத்து திருமண வீட்டு சூழல், அடிதடி மற்றும் கிண்டல் கலந்த முதல் பாதி நகைச்சுவை, நடிகர்களின் இயல்பான நடிப்பு மற்றும் பெரிய லாஜிக் மீறல்கள் இல்லாத திரைக்கதை ஆகியவை படத்திற்கு பலம் சேர்க்கின்றன., முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி சில இடங்களில் சற்று நீளமானது போல தோன்றுவதுடன், கதையின் ஓட்டத்தில் வேகம் குறைவது சிறிய குறையாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், சின்னத்தடைகளைத் தாண்டி குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு கலகலப்பான விருந்தாக இந்த ‘மொத ராத்திரி’ அமைகிறது