
பள்ளியிலும் காதல் தோல்வி, கல்லூரியிலும் காதல் தோல்வி என தொடர் காதல் தோல்விகளை சந்தித்தாலும் நாயகன் கிஷன் தாஸ் காதலை விடுவதாக இல்லை. அப்படிப்பட்டவருக்கு மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. அங்கே அவருடைய டீம் லீடரான சிவாத்மிகாவை காதலிக்கிறார். ஆனால் அவரோ கிஷன் தாஸை தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்.
இந்த நிலையில் பணக்கார பெண் ஒருவருக்கு பொருத்தமான மணமகனை தேர்வு செய்யும் பணி இவர்களுக்கு வருகிறது. ஆனால் அந்த பணக்கார வீட்டுப் பெண், தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரது பயோடேட்டாவை மேட்ரிமோனியலில் சேர்த்து எப்படியாவது தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் நாயகனிடம் கேட்கிறார். ஆனால் சிவாத்மிகா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
அதனால் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேற நினைக்கும் கிஷன் தாஸ் சிவாத்மிகாவுக்கு இறுதியாக ஒரு கண்டிஷன் போடுகிறார். அதை நிறைவேற்றினால் தான் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக கூறுகிறார். அப்படி என்ன கண்டிஷன் போட்டார் ? சிவாத்மிகா அதை நிறைவேற்றினாரா ? அந்த பணக்கார வீட்டுப்பெண்ணின் திருமணத்தை கிஷன் தாஸால் முடித்து வைக்க முடிந்ததா ? காதலை வெறுக்கும் சிவாத்மிகா கடைசியில் என்ன முடிவு எடுக்கிறார் என்பது மீதிக்கதை.
ஹீரோ கிஷன்தாஸ் நடிப்பிலும் சரி நகைச்சுவையிலும் சரி இளமை துள்ளும் இளைஞனாக படம் முழுவதும் தன்னுடைய பங்களிப்பால் ரசிக்க வைக்கிறார். மூன்று தோற்றங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு..
நாயகி சிவாத்மிகா கடமையே கண்ணாக சிடுமூஞ்சி மேனேஜராக அதேசமயம் முதிர்ச்சியான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். காதல், பாசம், கோபம் என வேறுபட்ட நடிப்பை அழகாக வெளிப்படுத்தி அனைவரையும் கவர்கிறார்.
விடிவி கணேஷ், துளசி, சந்தானபாரதி, சிபி.ஜெயகுமார், நம்ரிதா, ஹர்சத் கான், சந்தியா வின்ஃப்ரெட் என மற்றவர்களும் பொருத்தமான தேர்வு..
கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகளில் இளமைத்துள்ளல். சித்துகுமாரின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சிலம்பரசன் குரல் (வாய்ஸ் ஓவர் ) கதையோடு பயணிப்பது படத்திற்கு இன்னொரு பிளஸ்.
இன்றைய இளம் தலைமுறையின் காதலை அழுத்தமாக திரையில் சொன்ன இயக்குனர் சாரங் தியாகு, முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். கவுதம் மேனன் உதவியாளர் என்பதால் பல இடங்களில் அவரின் குருநாதர் தாக்கம், டச்சிங் தெரிகிறது.. அந்த வகையில் காதலை புதிய கண்ணோட்டத்துடன் இயல்பாக அனைவரும் ரசிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாரங் தியாகு.









