
ஒரு நாள் நள்ளிரவில் வேன் ஒன்று விபத்துக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிகிறது. அதில் கருகி இறந்துபோன மூன்று பேர் பெண்கள். ஒருவர் ஆண் என்று தெரிய வருகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஆதித்ய மாதவன், இறந்து போன இந்த மூன்று பேரும் அனாதை ஆசிரமத்தை சேர்ந்த பெண்கள் என்பதை கண்டுபிடிக்கிறார், அதேசமயம் எரிந்து போன அந்த ஆண், ஓட்டுனர் அல்ல என்றும் வேறு ஒரு நபர் என்றும் தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விசாரிக்க உண்மைகள் தெரிய வருகின்றன.
இன்னொரு பக்கம் ஆதித்ய மாதவனின் காதலி டாக்டர் கௌரி கிஷன் வேலை பார்க்கும் மருத்துவமனையில் அவருக்கு தெரியாமல் ஒரு மோசடி நடக்கிறது. அதை கண்டுபிடித்து ஆதித்யாவிடம் அவர் சொல்ல, ஏற்கனவே விசாரிக்கும் வழக்கிற்கும் இதற்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. இதற்கு பின்னணியில் இந்த சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய தீங்கு ஏற்படுத்தும் ஒரு செயல் நடைபெற்று வருவதும் தெரியவர அதை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார் ஆதித்ய மாதவன்.
இந்த கொலைகளுக்கு யார் காரணம் மருத்துவமனையில் அப்படி என்ன மோசடி டக்கிறது சமூகத்திற்கு இதனால் என்ன தீங்கு ஏற்பட போகிறது என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.
அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன் முதல் படம என்கிற எந்தப் பதற்றமும் இல்லாமல் வெகு இயல்பாக நடித்திருப்பதுடன் பாத்திரத்தில் சரியாகப் பொருந்துகிறார். இயல்பான நடிப்பும் கம்பீரமும் அவருக்கு பக்கபலமாக கைகூடி வந்திருக்கிறது.
நாயகி கௌரி கிஷன் மருத்துவராக இந்த படத்தில் வருகிறார். ஏதோ கதாநாயகன் காதலிப்பதற்காக ஒரு நாயகி இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் இயக்குனர் அந்த கதாநாயகியையும் கதைக்குள் வரவைத்து சிறப்பு செய்திருக்கிறார்.
சக போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் ஆர்ப்பாட்டமில்லாத கச்சிதமான நடிப்பு படத்திற்கு பலம். படத்தின் முக்கிய வில்லனாக இருவேறு தோற்றத்தில் மாறும் சுமேஷ் மூர் வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்துள்ளார். சில காட்சிகளே என்றாலும் நண்டு ஜெகன் சிறப்பு.
ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில். கதாபாத்திரங்களையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குனர் அபின் ஹரிஹரன் எடுத்துக்கொண்ட கதைக்களம் கொஞ்சம் சிரமமானது என்றாலும் திரைக்கதையில் இடைவேளை வரை ஒரு பரப்பரப்புடன் ஒரு விறுவிறுப்புடன் மிக அழகாக படத்தை நகர்த்தி செல்கிறார். மருத்துவத்துறையில் நடக்கும் குற்ற செயலை மையமாக வைத்துக் கொண்டு பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். அந்தவகையில் மனித நேயம், சமூக சிந்தனை ஆகியவற்றை இணைத்து புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறது..









