Reviews

கிறிஸ்டினா கதிர்வேலன் ; விமர்சனம்


வேலைக்கு போகாமல் வெட்டியாக ஊர் சுற்றும் நாயகன் கதிர்வேலன் நாயகி கிறிஸ்டினாவை ஒரு திருவிழாவில் கண்டதும் காதலில் விழுகிறார். ஆனால் அவரோ கிறிஸ்டியன். இருந்தாலும் அவரை காதலிப்பதற்காக கல்லூரியில் சேர்ந்து அவரது அன்பை பெற முயற்சிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் கிறிஸ்டினாவிடம் காதலை சொல்ல அவரது ஊருக்கே தேடி செல்லும்போது அங்கே அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகிறது.

இதற்கு கொஞ்ச நாட்கள் முன்னதாக தங்களது நண்பர்களின் காதல் திருமணத்திற்காக கதிர்வேலனும் கிறிஸ்டினாவும் சாட்சி கையெழுத்துக்காக தங்களது புகைப்படம் மற்றும் ஆதாரங்களை கொடுத்ததில் ஒரு சிக்கல் ஏற்பட்டு தற்போது அது கிறிஸ்டினாவில் திருமணத்திற்கு மிகப்பெரிய சிக்கலாக வந்து நிற்கிறது.

கதிர்வேலன் காதலியை விட்டு நாகரிகமாக ஒதுங்கி செல்ல நினைத்தாலும் இந்த சிக்கலை தீர்த்து விட்டு ஒதுங்கி செல்ல நினைக்கிறார். அவரால் இந்த சிக்கலை தீர்க்க முடிந்ததா > அது என்ன சிக்கல் ? கிறிஸ்டினாவின் திருமணம் நடைபெற்றதா ? கதிர்வேலனின் காதல் என்ன ஆனது என்பது மீதிக்கதை.

கதிர்வேலன் கதாபாத்திரத்தில் காதலுக்காக ஏங்கி, காதலிக்காக உருகி, யதார்த்தமாக நடித்துள்ளார் கவுசிக்.. . கிறிஸ்டினாவாக நடித்திருக்கும் நாயகி பிரதீபா அழுத்தமான கதாபாத்திரத்தை தன் நடிப்பால் அழகாக கையாண்டுயிருக்கிறார்.

அருள் டி.சங்கர், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு மற்றும் அவர்களது கதாபாத்திரங்கள் படத்திற்கு பக்கபலம். குறிப்பாக கஞ்சா கருப்புவின் பேச்சும் அணுகுமுறையும் முன்போல ரசிக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில். பின்னணி இசையில் நேர்த்தி. ஒளிப்பதிவாளர் பிரகத் முனியசாமியின் கேமரா, இரவு நேரக் காட்சிகளையும், அதில் நடக்கும் சம்பவங்களையும் மிக நேர்த்தியாக படமாக்கி பாராட்டு பெறுகிறது..

கதையின் ஆரம்பத்தில் இது ஒரு சராசரி காதல் படமாக இருக்கும் என்று நினைத்த நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன். இடைவேளைக்கு பிறகு அந்த விறுவிறுப்பை தொடர்ந்தாலும் கிளைமாக்ஸில் கொஞ்சம் தடுமாறியிருப்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் ரசிக்கும்படியான காதல் படம் தான். .